Pages

Showing posts with label Interview of Ameer-e-Jamaat. Show all posts
Showing posts with label Interview of Ameer-e-Jamaat. Show all posts

Tuesday, June 21, 2011

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை: அமீரே ஜமாஅத் பேட்டி - நான்காம் பாகம்



m முஸ்லிம் சமுதாயத்தில் மஸ்லக் தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நீடிக்கின்றனவே! இன்றும் அனல் பறக்கும் விவாதங்களும் சூடான சர்ச்கைகளும்தாம் புகழ்பெற்ற மார்க்க மதரஸாக்கள் வெளியிடுகின்ற பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்-கின்றனவே! (இன்று நாட்டில் பத்திரிகை வெளி-யிடாத மதரஸாவே இல்லை என்கிற அளவுக்கு மதர-ஸாக்கள் அனைத்தும் பத்திரிகைகளை வெளியிட்-டுக்கொண்டிருக்கின்றன) கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சமுதாயம் மிகக் கடுமையான நெருக்கடிகளை-யும் மிகப்பெரும் பிரச்னைகளையும் சந்தித்து நிற்-கின்றது. என்றாலும் மஸ்லக் தொடர்பான சர்ச்சை-களுக்கும் சண்டைகளுக்கும் தான் முடிவே இல்லாத நிலைமையைப் பார்க்கின்றோம். நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலைமை? இதற்கு யார்தான் பொறுப்பு? இந்த நிலைமையை எப்படித்தான் மாற்றுவது? ஒரு மார்க்க அறிஞர் என்கிற நிலையில் உங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று நாம் சந்தித்து நிற்கின்ற முக்கியமான முரண்பாட்டை நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் ஃபிக்ஹு தொடர்பான விவகாரங்களிலும், மஸ்லக் தொடர்பானவற்றிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக் கருத்துவேறுபாடுகள் இந்தியத் துணைகண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) முற்றிப்போய் கடுமையாகியிருப்பதைப் போன்ற நிலைமையை உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இவற்றையே சமுதாயத்தின் முக்கியமான பிரச்னையாகப் புரிந்துவைத்திருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இவற்றையே உண்மையான மார்க்கமாகவும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் தம்முடைய மஸ்லக்குக்கு ஆதரவாக வாதிடுவதை மார்க்கத்திற்குச் செய்கின்ற மிகப்பெரும் சேவையாகவும் இவர்கள் நினைக்கின்றார்கள். மஸ்லக்குகளின் உயிர்நாடியே இந்தப் பிரச்னைகள்தாம் என்று இவர்கள் நினைக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. இதனால் இவர்கள் எதிராளியின் மஸ்லக்கை சகித்துக்கொள்வதற்கு எந்த நிலையிலும் முன் வர மாட்டார்கள்.

இது தொடர்பாக இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக மஸ்லக் தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகள் மார்க்கம், ஷரீஅத் தொடர்பான கொள்கை சார்ந்த கருத்துவேறுபாடுகள் கிடையாது. அதற்கு மாறாக இந்தக் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பானவையே. அந்தச் சட்டங்கள், பிரச்னைகள் குறித்து ஷரீஅத்தின் நிலைப்பாட்டை அறிய முற்படும்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள்தாம் இவை. இந்தப் பிரச்னைகளோ மார்க்கத்தின் அடிப்படைகளுடன் தொடர்புள்ள பிரச்னைகள் அன்று. அதற்கு மாறாக அவை கிளைப் பிரச்னைகளாக, பகுதிப் பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன. குர்ஆனும் நபிவழியும்தாம் இறுதி ஆதாரங்கள் என அனைத்து மஸ்லக்குகளைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதன்படித்தான் செயல்படுகின்றோம் என்றே அனைவரும் வாதிடுகின்றார்கள். ஆனால் சில சட்டங்கள், பிரச்னைகள் தொடர்பாக அவற்றுக்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்ற சான்றுகள் குறித்துதாம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு மஸ்லக்கையும் ஆதாரமற்றது என்று சொல்லிவிட முடியாது. அனைத்துமே தமக்கென ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தச் சான்றுகளை மையப்படுத்தித்தான் வாதங்களும் சர்ச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் எந்தப் பிரச்னையில் எந்த மஸ்லக்குக்கு முன்னுரிமை இருக்கின்றது என்கிற கோணத்தில்தான் விவாதம் நடக்கின்றது. இதனை நெஞ்சத்தில் பசுமையாக வைத்திருந்தால் கருத்துவேறுபாட்டில் கடுமையோ, தீவிரமோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த மஸ்லக்குகள் தொடர்பாக சர்ச்சைகள், வாதவிவாதங்களில் மூழ்கிப்போவதால் தீனின் உண்மையான நோக்கம், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவை அமுங்கிப் போகின்றன; இறைவனுடனும் இறைத்தூதருடனும் தொடர்பும் பற்றும் மழுங்கிப் போகின்றன; நடத்தையிலும் எண்ணத்திலும் உயர்ந்தோங்க வேண்டும் என்கிற ஆசையும் கைரே உம்மத்தாக இருக்கின்றோம் என்கிற எண்ணத்தெளிவும், தன்னுடைய வெற்றிக்காகவும் உலகின் வெற்றிக்காகவும் அந்த மார்க்கத்திற்காக சுறுசுறுப்பாக செயல்பட்டாக வேண்டும் என்கிற கடமையுணர்வும் மறந்துபோகின்றன; இன்றைய காலத்தில் இஸ்லாம்தான் ஒரே மாற்றாக இருக்கின்றது என்கிற உண்மையும் இதுபோன்ற அடிப்படையான விவகாரங்களும் பார்வையிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் விலகிப்போய்விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற விஷயங்கள் நம்முடைய பேச்சிலும் விவாதத்திலும் இடம்பெறாமலே போய்விடுகின்றன.

மார்க்கத்தைப் பற்றிய சரியான கருத்தோட்டமும் தற்போதைய நிலைமைகளில் அது நம்மிடம் வேண்டுவன எவை என்பவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நம்முடைய நெஞ்சங்களில் இருக்குமேயானால், இந்தக் கிளைப் பிரச்னைகளிலும் சின்னச் சின்ன சர்ச்சைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளவே மாட்டோம். மற்றவர்கள் செய்கின்ற இஜ்திஹாதையும் செயல்முறையையும் மகிழ்ச்சியுடன் சகித்துக்கொள்வோம். தொடக்கக்காலத்தில் நபித்தோழர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கிடையிலும் சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்துக்கொண்டே அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றார்கள். மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கின்ற பணியிலும் மார்க்கத்தை மேலோங்கச் செய்கின்ற போராட்டத்திலும் தோளோடு தோள் நின்று பங்கேற்றார்கள். அந்த அழகிய முன்மாதிரியை ஏற்றுச் செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் இந்த மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை என மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன். மஸ்லக் பற்றிய கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தையும் கடுமையையும் கட்டுப்படுத்துவதில் ஜமாஅத் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு வகையில் அவற்றை முற்றாக ஒழித்துவிட்டிருக்கின்றது என்றே சொல்வேன். ஜமாஅத் அன்பர்களில் வெவ்வேறு மஸ்லக்குகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் யார் எந்த மஸ்லக்கைப் பின்பற்றுகின்றார் என்கிற அளவிலும் கூட ஜமாஅத் அன்பர்கள் விசாரித்துக்கொள்வதுமில்லை; அது பற்றிய சர்ச்சையே மூள்வதில்லை. இகாமத்தே தீன் - தீனை நிலைநாட்டுதல் என்கிற உயர்ந்த, சிறந்த குறிக்கோள் ஜமாஅத் ஊழியர்களை ஓரணியில் நிற்க வைத்திருக்கின்றது. இதே போன்று ஜமாஅத்துடன் தொடர்புடைய மார்க்க மதரஸாக்கள், நிறுவனங்களிலும் கூட ஃபிக்ஹு நிலைப்பாடுகள் பற்றி விவாதம் நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று எவர் மீதும் எந்தவோர் மஸ்லக்கும் திணிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, தாமாக நிலைப்பாடு ஒன்றை எடுத்துக்கொள்வதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது.
 
m நம்முடைய நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் நெருக்கமாக வாழ்கின்றார்கள். நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி இதே நிலைமை தான் என்றாலும் அண்மைக்காலமாக  முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கையினர் மாநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பதைப் பார்க்க முடிகின்றது. இவர்களுக்கும் பொதுவான முஸ்லிம்களுக்கும் தொடர்போ, உறவோ இருப்பதில்லை. தொழுகை வசதியின்றி, பள்ளிவாசல் இன்றி இவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் பெருநாள் தொழுகைகளுக்கும் இரமளான் மாதத்து தராவீஹ் தொழுகைகளுக்கும் கூட இவர்கள் வெகுதொலைவு பயணிக்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள். தனித்து வாழ்வதால் இவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்கும் இஸ்லாமிய அச்சில் பயிற்சி கொடுப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகின்றது. கிராமங்களிலும் இவ்வாறு ஓரிரு குடும்பங்களோ அல்லது நான்கைந்து குடும்பங்களோ மட்டும் முஸ்லிம்களாக இருக்கின்ற சூழலில் அந்தக் கிராமத்து முஸ்லிம்களும் மேற்படி சிக்கல்களுக்கு ஆளாகின்றார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி வாழ்வதிலும், இஸ்லாமியப் பாரம்பர்யங்களைப் பின்பற்றுவதிலும் சிரமத்துக்கு ஆளாகின்றார்கள். இந்த முஸ்லிம் குடும்பங்களை முஸ்லிம் குடியிருப்புகளுடன் பிணைப்பதற்கு உங்களுடைய பார்வையில் எத்தகைய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?  


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: ஒரு முக்கியமான பிரச்னையை நீங்கள் எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.

பொதுவாக பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை குடியிருப்பு வசதிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கின்ற பகுதிகளில் ஸ்லம் ஏரியா எனச் சொல்லப்படுகின்ற பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் விரல் விட்டு எண்ணி விடுகின்ற அளவுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் மார்க்கத்தைப் பேணி வாழ்வதே பெரும் பாடாகிவிடுகின்றது. மார்க்கத்தின் கட்டளைகளும் அது விதிக்கின்ற பொறுப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இவர்கள் வாழ்கின்ற சூழல் இவர்களை நேரெதிர் திசையில் இழுக்கின்றது. மிகவும் இக்கட்டான நிலைமைதான்.

இவர்கள் தொடர்பாக நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம்? நான்கு களங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்று எனக்குத் தோன்றுகின்றது.

  • முதலாவதாக, நாடு முழுவதும் இவ்வாறு முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி தனித்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி வாழ்கின்ற முஸ்லிம்கள் குறித்து சர்வே எடுக்க வேண்டும். இவ்வாறு சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களின் மார்க்கத் தொடர்பு எந்த நிலைமையில் இருக்கின்றது? முஸ்லிம் குடியிருப்புகளை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படுகின்ற பாதகமான நிலைமையை இவர்கள் எப்படி எதிர்கொள்கின்றார்கள்? என்கிற ரீதியில் ஆய்வு நடத்த வேண்டும். என்னைப் பொருத்த வரை எல்லா இடங்களிலும் நிலைமை ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன். இஸ்லாத்தின்படி வாழ்வதற்கு இவர்களில் பலரும் பலவிதமான முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். இவர்களை சீர்திருத்துவதற்கான திட்டம்வகுக்கும்போது அந்த முயற்சிகளும் அனுபவங்களும் பெரிதும் உதவியாக இருக்கும்.
  • இத்தகைய இடங்களில் தங்கியிருந்து மார்க்க சேவையாற்றுகின்ற வகையில் முஅல்லிம்கள், ஆசிரியர்கள், இமாம்கள், அழைப்பாளர்கள் போன்றவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். இவர்கள் இந்த இடங்களில் தங்கியிருந்து மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் தேவையான அடிப்படைக் கல்வியையும் போதிப்பார்கள். இத்தகைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் மார்க்கத் தொடர்பை வலுப்படுத்துவதற்கு முயல வேண்டும். இதற்கான செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
  • அடுத்து இந்தக் குடியிருப்புவாசிகளுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுடைய மொழியில் மார்க்கத்தின் அடிப்படைகளை விவரிக்கின்ற நூல்களை வழங்க வேண்டும். குர்ஆன், நபிமொழி, அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாறு ஆகியவற்றையும் நவீன மனங்களைத் திருப்திப்படுத்துகின்ற ஆக்கங்களையும் கொண்டதாக இந்த நூலககங்கள் இருத்தல் வேண்டும். இத்தகைய நூல்கள் இன்று நாட்டின் அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் புதியதாக நூல்களும் எழுதப்படல் வேண்டும்.
  • இது தொடர்பாக இன்னொன்றையும் செய்யலாம். இவர்களின் பிள்ளைகளுக்காக இஸ்லாத்தைப் போதிக்கின்ற மதரஸாக்களை நிறுவி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அடுத்த தலைமுறையை மார்க்கத்தின் நிழலில் கொண்டு வருவதற்கு இத்தகைய முயற்சி இன்றியமையாததாகும். இதற்காக மார்க்க மதரஸாக்களின் உதவியையும் பெறலாம். இது மிகப் பெரிய வேலை. இதற்காக முஸ்லிம் அமைப்புகளும் சமுதாயத்தின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கின்ற புரவலர்களும் ஒன்றுசேர்ந்து நீண்டக்காலத் திட்டம் வகுத்து செயல்பட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் தனது பங்கை ஆற்றும்.
m இன்று இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற, திடீரென முளைத்துவிடுகின்ற பிரச்னைகள், சவால்கள்; எடுத்துக்காட்டாக, பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, அரசுக் கல்வித்திட்டத்தில் இஸ்லாம் அல்லாத அல்லது இஸ்லாமியக்  கோட்பாடுகளுக்கு நேர்எதிரான பாடங்கள் திணிப்பு, அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்ற வகுப்புக்கலவரங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டாவதாக முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்புகள். அவர்கள் செய்தே தீரவேண்டிய வேலைகளாக இவற்றைச் சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, மார்க்கக் கல்விக்கான முறையான ஏற்பாடு, செக்குலர் கல்வியோடு மார்க்கக்கல்விக்கான ஏற்பாடு, முஸ்லிம் சமூக சீர்திருத்தப்பணிகள் போன்றவை. இவற்றை முஸ்லிம்கள் செய்துகொண்டும் இருக்கின்றார்கள். இந்த இரண்டுவிதமான பணிகளிலும் வெவ்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்களும் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஏதாவது செய்யப்பட வேண்டாமா? முதல் வகை சவால்களைச் சந்திப்பதற்காக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத் என்கிற கூட்டமைப்பை உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பு இன்றும் செயலாற்றி வருகின்றது. என்றாலும் அதன் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவையாகவோ தீர்க்கமானவையாகவோ இல்லை. இந்த நிலையில் மேறப்டி இரண்டு வகை சவால்களையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்படுவது சாத்தியமா? உங்களுடைய கருத்து என்ன?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நீங்கள் குறிப்பிட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புளும் நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன. இவை அனைத்தும் சிறிய, பெரிய அளவில் தம்மால் இயன்றதைச் செய்து வருகின்றன. சில தனிமனிதர்களும் இந்தச் சவால்களில் ஆர்வம் கொண்டு தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றார்கள். ஆனால் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், நிறுவனங்கள், தனிமனிதர்கள் ஆகியோருக்கிடையில் எந்தவகையான தொடர்போ, இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடோ இல்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்தமது பாணியில் தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ள படி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்ட கூட்டமைப்புதான் அகில இந்திய முஸ்லிம் முஷாவரத். இந்தக் கூட்டமைப்பைக் கொண்டு நாம் பிரச்னைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு தீர்ப்பதற்கு முயலலாம். கடந்த காலத்தில் இத்தகைய முயற்சிகள் பல முறை நடந்திருக்கின்றன. இந்தக் கூட்டமைப்பை வலுப்படுத்துவது நம் எல்லார் மீதும் இருக்கின்ற பொறுப்பாகும்.

m முஸ்லிம் தனியார் சட்டம் இன்று மிக முக்கியமான பிரச்னையாக இருக்கின்றது. ஒருவகையில் அதனை நம் மீது திணிக்கப்பட்ட, திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவும் சொல்லலாம். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்துடன் தொடக்கத்திலிருந்தே ஜமாஅத் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கின்றது. அது நிறுவப்படுவதிலும் ஜமாஅத் முக்கியமான பங்காற்றியது. நீங்களும் அதன் துணைத் தலைவராக இருக்கின்றீர்கள். முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கின்றதா? எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது? தற்போதைய நிலைமை என்ன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்னையை அசாதாரணமான பிரச்னை என்றோ ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திடீரென முளைத்துவிட்ட அதிரடி பிரச்னையாகவோ சொல்லி விட முடியாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் தத்தமது தனியார் சட்டங்களின்படிச் செயல்படுகின்ற சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டியது அவசியமாகின்றது.

சில சமயம் நாட்டின் நீதிமன்றங்கள் தருகின்ற சில தீர்ப்புகள் முஸ்லிம் தனியார் சட்டத்துடன் மோதுகின்றவையாக அமைந்துவிடுகின்றன. அல்லது இந்த நீதிமன்றங்கள் தருகின்ற சில விளக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. இந்தத் தீர்ப்புகளை எதிர்க்கத் தவறினால் இந்தத் தீர்ப்புகளும் இந்தத் தீர்ப்புகளில் இடம் பெற்றுவிட்ட தவறான விளக்கங்களும் வருங்காலத்தில் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துபோகின்ற ஆபத்து இருக்கின்றது. பிறகு சிறுகச் சிறுக ஷரீஅத்தின் பல்வேறு அம்சங்கள் மீது கை வைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்துவிட நேரிடலாம்.

இதே போன்று நாட்டில் பல்வேறு மதத்தவர்களுக்கு தனித்தனி தனியார் சட்டங்கள் எதற்கு? அனைத்தையும் ஒழித்துவிட்டு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாமே என்றும் அவ்வப்போது குரல் எழுப்பப்படுவதுண்டு. நாட்டின் உச்ச நீதிமன்றமும் தன் பங்குக்கு இது குறித்து அரசின் கவனத்தை அவ்வப்போது ஈர்த்து வருவதுமுண்டு. முஸ்லிம்களின் விருப்பத்துடன்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றே இன்று வரை அரசாங்கம் சொல்லி வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் விருப்பம் என்று சொல்லி இவர்கள் எத்தகைய நடவடிக்கையை எப்போது எடுப்பார்கள் என்று எதுவும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அதே சமயம் இங்கு இன்னொன்றையும் அழுத்தம்திருத்தமாக, ஆணித்தரமாக தெளிவுபடுத்திவிடுவதும் அவசியமாகின்றது. அதாவது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விரும்பினாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தம்முடைய விருப்பங்களின் அடிப்படையில் எத்தகைய திருத்தத்தையும் கொண்டு வர முடியாது. அந்த உரிமை அவர்களுக்கு இல்லை; எவருக்கும் இல்லை.

இந்தப் பிரச்னையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பாராட்டத்தக்க முறையில் செயலாற்றி வருகின்றது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், இயக்கங்கள், தனி மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்கு இருந்துவருகின்றது.

என்றாலும்இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அது மிகவும் கவனிக்கத்தக்க பிரச்னையும் கூட. அண்மைக்காலமாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது வட்டத்துக்கு வெளியே இருக்கின்ற பிரச்னைகளையும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. பல்வேறு பிரச்னைகளில் அது மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளது. இந்த அக்கறையும் ஆர்வமும் இனி வருங்காலத்தில் அதற்கு நன்மையோ இலாபமோ அளிக்காது என்பதுதான் எனது கவலையெல்லாம்.

உங்களுக்கு ஒன்று நினைவிருக்கும். பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டவுடன் ராபிதா கமிட்டி, ஆக்ஷன் கமிட்டி, பாபரி மஸ்ஜித் கமிட்டி ஆகிய மூன்று கமிட்டிகள் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பணியில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. இந்த நிலையில் சமுதாயத்தின் முக்கியமான பிரச்னை என்பதால் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்த விவகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என யோசனை சொல்லப்பட்டது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்னை என்பதால் இந்த விவகாரத்தை வாரியம் எடுத்துக் கொண்டது.

ஆனால் இது எங்குப் போய் முடிந்ததெனில் இன்று முஸ்லிம்களின் கட்டாயக் கல்வி, வக்ஃப் சொத்துகள் பற்றிய பிரச்னைகள் போன்றவற்றையும் வாரியம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இத்தனைக்கும் இந்தப் பிரச்னைகளை ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புகள் ஆண்டு வந்துள்ளன; துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. இப்போது நிலைமை என்னவெனில் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை! இதன் விளைவாக வாரியத்துடனான அந்த அமைப்புகளின் தொடர்பும் உறவும் பலவீனமடைகின்ற ஆபத்து மூண்டுள்ளது. தங்களுடைய பணிகளில் வாரியம் தலையிடுவதாக அந்த அமைப்பினர் நினைப்பதற்கும் வாய்ப்வு இருக்கின்றது.

இதே போன்று சமூக சீர்திருத்தப் பணிகளிலும் வாரியம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்த வேலையில் முஸ்லிம் அமைப்புகள் அனைத்துமே தொடக்கத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றன. மார்க்க மதரஸாக்களும் தனி மனிதர்களும்கூட இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் தனியார் சட்ட வாரியமோ இது தொடர்பாக அந்த அமைப்புகளைத் தொடர்பு கொள்வதுமில்லை. அந்த அமைப்புகளும் இந்த விவகாரத்தில் வாரியத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சமுதாயத்தின் அமைப்புகளால் தீர்த்துக்கொள்ளத்தக்க பிரச்னைகளையும் வாரியம் வலிந்து தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகத் தோன்றுகின்றது. இதன் இயல்பான விளைவாக அந்த அமைப்புகளுக்கும் வாரியத்துக்கும் இடையில் இடைவெளி விழலாம். அதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தனது செயல்பாடுகளை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பானவற்றில் மட்டும் குவித்து வைத்திருப்பதே நல்லது. அதுதான் அதற்கு வலு சேர்க்கும். அந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் முஸ்லிம் அமைப்புகள் அதற்கு முழு மனநிறைவுடன் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிப்பர்.

m இன்று நாட்டில் ஊழல் ஒழிப்பு மிகப்பெரும் பிரச்னையாக பேருருவம் எடுத்துள்ளது. மிகப் பெரும் மக்கள் பிரச்னையாகவும் இது வளர்ந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தமான விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் அரங்கிலும் சட்டம் இயற்றுதல் தொடர்பாகவும் நடந்து வருகின்ற முயற்சிகள் குறித்து உங்களுடைய கருத்து  என்ன?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நமது நாட்டில் ஊழலும் இலஞ்சமும் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. ஆனால் இப்போது பயங்கரமான அளவில் பேருருவம் எடுத்திருப்பதைப் போன்று இதற்கு முன் எப்போதும் நடந்தது கிடையாது.

இது நம் நாட்டின் அரசியல், பொது வாழ்வு ஆகியவற்றின் நாடி நரம்புகளிலெல்லாம் இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம் கொடுத்து எந்தவொரு வேலையையும் சாதித்து விட முடியும்; இலஞ்சம் கொடுக்காமல் ஆகுமான உரிமையைக் கூடப் பெற முடியாது. இந்த உண்மைநிலையை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருமே நன்கு அறிந்திருக்கின்றார்கள்.

இப்போது இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்காக இங்கே மக்கள் எழுந்திருக்கின்றார்கள்.  பாடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் முயற்சிகளை நாங்கள் மனமார வரவேற்கின்றோம்.

ஆனால் வெறுமனே சட்டம் இயற்றுவதால் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துவிட முடியாது என்றே நாங்கள் கருதுகின்றோம். அதற்கு மாறாக இலஞ்சமும் ஊழலும் புதுப்புது வேடங்களைப் பூண்டு வந்துகொண்டே இருக்கும்.

இந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவதாக, நாடெங்கிலும் சமூகம் முழுவதிலும் இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைக்க வேண்டும். இந்தச் சமூகச் சூழல் எந்த அளவுக்கு உக்கிரமாக இருக்க வேண்டுமெனில் இலஞ்சமாகப் பணத்தைக் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ எவருக்குமே தைரியம் இருக்கக் கூடாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக இத்தகைய இறுக்கமான சூழலை ஏற்படுத்தாத வரையில் வெறுமனே சிலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதாலோ, சிலர் மீது வழக்குத் தொடர்வதாலோ இந்தத் தீமையை ஒழிக்கவே முடியாது. இத்தகைய சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்காக எவருமே எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் வருத்தம் தருகின்ற செய்தி.

இரண்டாவதாக தனி மனிதர்களிலும் சமூகத்திலும் இறையச்சமும் மறுமையில் இவ்வுலகச் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையும் நிலை பெற வேண்டும். இலஞ்சம் வாங்குகின்ற ஒவ்வொரு மனிதனும் நாளை மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமே...! அப்போது இந்தச் செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றோம் என்று எண்ணி மனம் பதைக்க வேண்டும். இலஞ்சம் கொடுக்கின்றவனும் எந்தத் தகாத செயலுக்காக அல்லது முறைகேட்டுக்காக இலஞ்சம் கொடுக்கின்றானோ அந்தத் தகாத செயல் குறித்தும் முறைகேடு குறித்தும் நாளை மறுமை நாளில் இறைவன் விசாரித்தால் என்ன பதில் சொல்வது, அவன் தருகின்ற தண்டனையை எப்படிச் சகிப்பது என்கிற ரீதியில் யோசிக்க வேண்டும்.  இதுதான் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வாகும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இத்தகைய மனோபாவத்தை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய சிந்தனைத் தெளிவை நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதியச் செய்வதற்கும்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

தமிழில்
: T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat.Translated by T Azeez Luthfullah.  
Concluded 
This is the concluding part (total four parts) of the interview of Ameer-e-Jamaat More Here and Here and Here
 

Tuesday, June 14, 2011

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று: அமீரே ஜமாஅத் பேட்டி - மூன்றாம் பாகம்


m தேர்தல் அரசியலில் பங்கேற்பது பற்றிய விவகாரத்தில் ஜமாஅத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் இது நம்முடைய கோட்பாட்டுக்கும் சிந்தனைக்கும் நேர்மாறானது என்றும் இப்போதையச் சூழலில் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்றும் மற்றவர்கள் எதிர்ப்பதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது உள்ள ஸிஸ்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது, அசத்தியமானது என்பதிலும் இந்த ஸிஸ்டத்தை மாற்றுவதற்காக ஜமாஅத் பாடுபட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை.

ஆனால் இப்போது நம்முடைய விவாதத்தில் இருக்கின்ற விவகாரம் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்புடையதாகும். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகமாகக் கூர்மையடைந்துவிட்டுள்ளன.

தேர்தல் அரசியலில் பங்கேற்பது மூலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா  என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.

இதற்குத் தீர்வுகாண்பதில் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதனைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும்; அது ஒட்டுமொத்தமாக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை அளிப்பதாக அமையும் என்பதுதான் பெரும்பாலோரின் கருத்து. இது தொடர்பாக என்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இராது. என்னுடைய சொந்தக் கருத்து இதற்குச் சாதகமாகவும் இருக்கலாம்; எதிராகவும் இருக்கலாம். ஒரு பொறுப்பாளர் என்கிற முறையில் நான் இந்த விவாதத்தில் விழக்கூடாது.

அண்மையில் நடந்த ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பேசியபோது ‘நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிஸம், சோஷலிஸம், டெமாக்ரஸி ஆகிய சொற்கள் ஒரு தனிப் பொருளில்தான் ஆளப்பட்டிருக்கின்றன. சோஷலிஸம் குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றம் ‘சோஷலிஸம் என்கிற சொல்  தொடக்கக்காலத்தில் எந்தப் பொருளில் ஆளப்பட்டதோ அந்தப் பொருளில் நாம் அதனை ஆள்வதில்லை. அதற்கு மாறாக சமூக நீதி என்கிற பொருளில்தான் தற்போது ஆளப்படுகின்றது’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி
செக்குலரிஸத்தைப் பொருத்தவரை ரொம்பக் காலத்திற்கு முன்பே அப்போதைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். அந்தக் காலத்தில் டாக்டர் சையத் மஹ்மூத் ‘செக்குலரிஸம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என வினவிய போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் ‘செக்குலரிஸம் என்பதற்கு இந்த நாட்டில் எந்தவொரு மதத்தின் ஆட்சியும் இருக்காது; அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள்; அனைவருக்கும் தத்தமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்பதுதான் பொருள் எனில் நாங்கள் அந்த செக்குலரிஸத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் செக்குலரிஸம் என்பதற்கு இறைவனின் ஆட்சியையும் இறையாண்மையையும் இறைவனின் அதிகாரத்தையும் மறுப்பதுதான் பொருள் எனில் நாங்கள் அதனை எதிர்ப்போம்’ என்று நறுக்குத்தெறித்தாற்போல் பதிலளித்தார். பிற்பாடு மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு மௌலானாவின் விளக்கம் உறுதி செய்யப்பட்டது.

ஜனநாயகம் தொடர்பாகவும் இதே நிலைப்பாடுதான். நான் இதனைக் குறித்து எத்தனையோ தடவை எழுதியிருக்கின்றேன். இறைவனின் அதிகாரத்திற்குப் பதிலாக மனிதர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம். இதனை நாங்கள் தவறான சிந்தனை என்றே சொல்கின்றோம். ஆனால் ஜனநாயகத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்னவெனில் அது கருத்து சுதந்திரத்தையும் விருப்பம் போல் செயல்படுகின்ற சுதந்திரத்தையும் வழங்குவதுதான். இந்தச் சுதந்திரமான சூழல் அழைப்புப் பணிக்கும் பரப்புரை செய்வதற்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும் களம் அமைத்துத் தருகின்றது. இதனால் தான் இத்தகைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மறுக்கின்ற, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாட்டு மக்கள் அனைவர் மீதும் திணிக்க நாடுகின்ற மற்ற ஸிஸ்டங்களோடு ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டத்தை நாங்கள் விரும்புகின்றோம்.

நமது நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது. இதிலிருந்து பயனீட்டுவதற்கு நாம் முயல வேண்டும். இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகம் செய்வதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து இங்குக் காணப்படுகின்ற தவறான கருத்துகள், எண்ணங்களைக் களைவதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தை மேற்கொள்வதில் நாட்டின் வெற்றியும் உலகத்தின் நன்மையும் அடங்கியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மதமோ அல்லது மார்க்கமோ அரசாங்க மதமாக அறிவிக்கப்படுவதற்கு ஜனநாயகம் தடையாக இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள். ஜனநாயக வழியில் செயல்பட்டு இந்தத் தடையை அகற்றுவதற்கான பொருத்தமான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். 

m வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவைக் குறித்து விதவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தால் நிறுவப்பட்ட கட்சி என்றும் இது ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் அணி என்றும் அதனுடைய கடிவாளம் ஜமாஅத்தின் கையில்தான் இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.  இந்தக் கட்சியை நிறுவியன் மூலமாக ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், கோட்பாடு, செயல்முறை ஆகியவற்றிலிருந்து வழிபிறழ்ந்து சென்று விட்டது என்றும் பொதுவான அரசியல் கட்சியைப் போன்று ஜமாஅத் செயல்படத் தொடங்கிவிட்டது என்றும் சிலர் நினைக்கின்றார்கள். இவற்றைக் குறித்து உங்களுடைய விளக்கம் தேவைப்படுவதாக உணர்கின்றேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் இங்கு நிலைபெற்றுள்ள ஜனநாயக சிஸ்டத்தின் துணையுடன் பிரச்னைகளைத் தீர்க்க விரும்புகின்ற கட்சிதான் வெல்ஃபேல் பார்ட்டி ஆஃப் இந்தியா.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளையும், பிற சிறுபான்மை மக்களின் பிரச்னைகளையும், பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளையும் இவ்வாறு அது தீர்க்க விரும்புகின்றது.

இந்த நாட்டில் சற்றொப்ப இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகளைக் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய உறுப்பினர்கள் மாநாட்டில் நான் ஆற்றிய தொடக்கவுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன். இது தனி நூலாகவும் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சந்திக்கின்ற பிரச்னைகளில் தலையாயது தமது இருப்பையும் தனித்தன்மையையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்கின்ற பிரச்னை ஆகும். மானம், மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதும் ஒரு சவால்தான். உடல், உயிர், உடைமைகளைப் பாதுகாத்தலும் ஒரு பிரச்னையே. கலவரங்களைத் தடுத்து நிறுத்தலும் அவற்றிலிருந்து மீண்டு எழுதலும் கூட மிகப்பெரும் பிரச்னையே. வறுமை, இல்லாமை, கல்லாமை ஆகியவற்றை ஒழித்துக் கட்டி முன்னேறுவதும் மிகப்பெரும் சவால்தான். மார்க்கக் கல்வியுடன் உலகக்கல்வியில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதும் மதரஸாக்களை நிறுவி வெற்றிகரமாக நடத்துதலும், பள்ளிவாசல்களை நிறுவுதலும் முஸ்லிம்களின் முக்கிய பிரச்னைகளே. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையீட்டைத் தடுத்துநிறுத்துதலும், வக்ஃப் சொத்துகளை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தலும் அவர்களின் பிரச்னைகளில் அடங்கும். இதே போன்று நீதியையும் நியாயத்தையும் வென்றெடுத்தலும், அக்கிரமம், கொடுமை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தலும் தக்க இழப்பீடுகளை ஈட்டலும் உட்பட எண்ணற்ற பிரச்னைகளை இன்றைய இந்திய முஸ்லிம்கள் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்துக்கொண்டு தீர்ப்பதற்காக முயன்று வந்துள்ளது. இவற்றைத் தீர்ப்பதற்காக அரசியல் அரங்கிலும் அது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டமும் அது வழங்கியிருக்கின்ற மனித உரிமைகளும்  நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பரிணாமமாக இருந்துள்ளது. நெருக்கடி நிலையின்போது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு ஒரு தனி மனிதனின் விருப்பங்களின்படி நாட்டை ஆட்டுவிக்க முயற்சிகள் நடந்தன. ஒரு வகையில் சர்வாதிகாரம் தலையெடுக்கத் தொடங்கியது. ஜமாஅத் இந்தப் போக்கை முழுமையாக எதிர்ப்பதெனத் தீர்மானித்தது. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும் பாடுபட்ட அரசியல் கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்தது. ஏனெனில் அதில்தான் நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை இருந்தது. ஜமாஅத் மீண்டும் தன்னுடைய பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் மலர்வதற்கும் அது அவசியமாக இருந்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது. முஸ்லிம்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் அணுகுகின்ற கட்சிகளுக்கும், முஸ்லிம்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்த கட்சிகளுக்கும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்துதல் அவசியம் என்று கருதியும் இந்த விஷயத்தில் பல்வேறு மனிதர்கள், மனிதக் குழுக்களிடையே காட்டப்படுகின்ற பாரபட்சம் சரியன்று என்று கருதியும் வந்த கட்சிகளுக்கும் ஜமாஅத்தும் ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு கட்சியும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே கிடையாது. அதற்கு மாறாக தமது நலன்களை மையமாகக் கொண்டே இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இயங்கி வந்துள்ளன. இதுதான் இன்று வரை நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜமாஅத்துக்கு இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று சமுதாயத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஜமாஅத்தே நேரடியாகக் களத்தில் இறங்கி விடுவது. அல்லது இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பது. பிற சிறுபான்மை சமூகத்தினரும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். அவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டு செயலாற்றுவது.

இந்த இரண்டு வழிகளில் இரண்டாவதை ஜமாஅத் எடுத்துக்கொண்டது. ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும். அதே சமயம் சமுதாயத்தின் பிரச்னைகளையும் பிற சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகவும் அவற்றை அரசியல் அரங்கில் கொண்டு செல்வதற்காகயும் ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே ஜமாஅத்தே இஸ்லாமி தீர்மானித்தது. இதன் விளைவாகத்தான் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா உதயமானது. இதனை நீங்கள் வெளிப்படையாகப் பார்க்கலாம். அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஜமாஅத்தைச் சேர்ந்த தோழர்களுடன் சமுதாயத்தின் முக்கியமான ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். இதே போன்று முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவமும் அதற்குக் கிடைத்திருக்கின்றது.‘
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாத் தலைவர்கள்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா குறித்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடுவது அவசியம் என்றே நினைக்கின்றேன். முதலாவதாக இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று. ஜமாஅத்தின் முன்முயற்சிகளால் உருவான கட்சிதான் அது. இரண்டாவதாக, இந்தக் கட்சி தீர்க்கமான, வரையறுக்கப்பட்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டதாகும். அந்த நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும், ஜமாஅத்துடன் அதன் தொடர்பும் உறவும் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும் ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே எல்லாமே வரையறுக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. “இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் முக்கியமான நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மாண்புகளின் அடிப்படையிலான அரசியலைச் செழித்தோங்கச் செய்வதற்காகவும், பொதுமக்களின் நலன்களுக்காகவும், அவர்களின் வளவாழ்வுக்காகவும், நீதி, நியாயத்தை நிறுவுவதற்காகவும் அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அந்த அரசியல் கட்சி உருவாவதற்காக ஜமாஅத் முன்முயற்சிகளை மேற்கொள்ளும். இந்தக் கட்சியின் நோக்கங்களை ஏற்றுக்கொள்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் இந்தக் கட்சியில் பங்கேற்பார்கள். இவர்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்களும் அடங்குவர். இந்தக் கட்சி சுதந்திரமாகச் செயல்படும். இந்தக் கட்சி மேற்கொள்கின்ற பாராட்டத்தக்க நற்பணிகளுக்கு ஜமாஅத் ஆதரவளிக்கும். அதே சமயம் அவற்றுக்குப் பொறுப்பேற்காது” என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி சொல்வதும், அதற்கும் மேலாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய நோக்கத்திலிருந்தும் செயல்திட்டத்திலிருந்தும் வழிபிறழ்ந்துவிட்டது என்று தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதும் முழுக்க முழுக்க தவறு ஆகும். இன்ஷா அல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளிலும் நோக்கத்திலும் நிலைத்து நிற்கும்; நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தை ஓர் மாற்று வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்துகின்ற போராட்டத்தை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் என நான் அழுத்தம்திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் அறிவிக்க விரும்புகின்றேன். இதற்காக வேண்டி வழக்கம்போல இந்த மீக்காத்திலும் விரைவில் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை வகுக்கும் என்றும் அறிவிக்கின்றேன்.

m கடந்த மீக்காத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. இதற்கு முன்பும் சில நாடுகளுக்கு நீங்கள் சென்று வந்துள்ளீர்கள். இந்தச் சுற்றுப்பயணங்களின்போது முஸ்லிம் சிந்தனையாளர்கள், உலகத் தலைவர்கள் பலருடனும் பேசியிருக்கின்றீர்கள்; கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். உலக அரங்கில் இந்தியாவைக் குறித்தும் குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் குறித்தும், இந்திய இஸ்லாமிய இயக்கம் பற்றியும் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: பரப்பளவிலும் சரி, இயற்கை வளங்களிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, மனித வளத்திலும் சரி நமது நாட்டுக்குத் தனிச் சிறப்பும் இடமும் உலக அரங்கில் இருக்கின்றது. அண்மைக்காலமாக அறிவியல் தொழில்நுட்பக் களத்தில் நம் நாடு ஈட்டியிருக்கின்ற சாதனைகளும் நம் நாட்டின் மதிப்பைக் கூட்டியிருக்கின்றது. இந்தக் காரணங்களால் முஸ்லிம் நாடுகள் நம் நாட்டுக்குத் தனி முக்கியத்துவத்தை அளிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளிலும் நம் நாட்டுக்குத் தனி மரியாதை இருக்கின்றது. இது எல்லாராலும் உணரப்படுகின்றது. முஸ்லிம் நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் பல்வேறு களங்களில் நமது நாட்டின் திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி வருகின்றன. மறுபக்கம் இங்கு இருக்கின்ற வறுமை, கல்லாமை, மனித நேயமின்மை, சமத்துவமின்மை, சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமது நாட்டின் இந்த ஒளிமயமான சித்திரத்தைக் குலைத்து வருகின்றன. இதனை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ளி விட முடியாது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்னவோ சிறுபான்மை மக்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இந்த அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒளிமயமான வரலாற்றுப் பாரம்பர்யத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒளிமயமான வரலாற்றுச் சுவடுகளையும் உலக  மக்கள் அறிந்தே இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, அரசியல், பொருளாதாரக் களங்களில் மிகவும் பின்தங்கியிருக்கின்றார்கள் என்பதையும் சில துறைகளில் நாட்டின் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களை விடவும் நலிந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதையும் பார்க்கும் போது அவர்கள் வருத்தப்படுகின்றார்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றார்கள். சில சமயம் முஸ்லிம்களிடையே புரையோடியிருக்கின்ற சில பலவீனங்கள் - குறிப்பாக இஸ்லாமிய போதனைகளைத் தெளிவாக அறியாத நிலை, அறியாமை, ஒற்றுமையின்மை - குறித்தும் பேச்சில் அடிபடுவதுண்டு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, முஸ்லிம்கள் ஆட்சி செலுத்துகின்ற நாடுகளிலும் இந்தப் பலவீனங்கள் காணப்படத்தான் செய்கின்றன. என்றாலும் பலவீனங்கள் எந்நிலையிலும் பலவீனங்கள்தாம். அவை எந்த சமூகக் குழுக்கள் மத்தியில் காணப்பட்டாலும் சரியே.

இந்தியாவில் செயல்படுகின்ற மிகப்பெரும் முஸ்லிம் அமைப்பு என்கிற வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கு முஸ்லிம் உலக நாடுகளில் தனி மரியாதையும் சிறப்பும் இருக்கின்றன. ஜமாஅத்துக்குத் தனி முக்கியத்துவம் தரப்படுகின்றது. அழைப்பியல், கல்வி ஆகியக் களங்களில் ஜமாஅத் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் சமூக சீர்திருத்தப் பணிகள் பற்றியும் மக்கள் சேவைக் களத்தில் ஜமாஅத் மிகப்பெரும் அளவில் ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்தும் ஏதாவதொரு வகையில் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். இந்த அளவுக்கு பல்வேறு களங்களில் விரிவாகவும் திட்டமிட்ட முறையிலும் செயலாற்றுகின்ற அமைப்பு வேறு எதுவும்  கிடையாது என்றும் அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் அருளால் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பபைப் பதிப்பித்து வெளியிட்டு ஆற்றியிருக்கின்ற சேவையை முஸ்லிம் உலகம் பெரிதும் மதிக்கின்றது.  

m ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயற்களம் இந்திய நாடுதான் என்பது என்னவோ உண்மையே. இருந்தாலும் இஸ்லாம் வழங்கும் தூது உலகளாவிய  தூதாக இருப்பதால் ஜமாஅத் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களைக் கவனித்து வந்திருக்கக்கூடும் அல்லவா? அருள்கூர்ந்து அந்த இஸ்லாமிய இயக்கங்களுடன் ஜமாஅத்துக்கு இருக்கின்ற தொடர்பையும் உறவையும் குறித்து ஒரிரு வார்த்தைகள் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: உலகின் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதற்காக இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது உண்மையே. இந்த அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் உலகின் பிற பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இடையில் ஒரு விதமான சித்தாந்தத் தொடர்பு இருக்கின்றது. அதே சமயம் இங்கு ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் செயல்முறைகளில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் நிறைய இருக்கின்றன. இந்த இயக்கங்கள் வெவ்வேறு செயல்முறைகளுடன் களத்தில் இருக்கின்றன. நாம் இங்கு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் நாட்டின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயல்முறையை வரையறுக்கின்றோம். உலகின் பிற பகுதிகளில் இயங்குகின்ற இயக்கங்களும் தத்தமது நாட்டு நிலைமைகளுக்கேற்ப சிந்தித்துச் செயலாற்றுகின்றன. இதனால்தான் ஒருமித்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த போதிலும் முற்றிலும் மாறுபட்ட செயல்முறைகளைக் கொண்டு இந்த இயக்கங்கள் இயங்கிவருகின்றன. 

m மத்தியக் கிழக்கிலும் வட ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளிலும் மக்கள் எழுச்சிஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக, இஸ்லாமிய எழுச்சியாகச் சொல்லலாமா? இஸ்லாத்தின் பக்கம் மீள்வதை உணர்த்துகின்ற அறிகுறிகளாக இந்த மக்கள் எழுச்சிகளைச் சொல்லலாமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: எகிப்து, சிரியா, துனிஸீயா, ஏமன், லிபியா போன்ற நாடுகளில் மிகப் பெரும் மாற்றங்களும் மக்கள் எழுச்சியும் மலர்ந்துள்ளன. ஆனால், அங்கு இன்னும் இஸ்லாத்தைக் குறித்து வெளிப்படையான விவாதம் நடக்கவில்லை; அதற்கு மாறாக, அந்த நாடுகளில் பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள்தாம் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்றே நான் கருதுகின்றேன்.
இந்த நாடுகளில் நடந்து வந்த அரசியல் கொடுமைகள், அவற்றின் பொருளாதார வீழ்ச்சி, நாட்டு வளங்களின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினரின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த இழிநிலை, பொதுமக்களுக்கு அந்த வளங்-களில் எத்தகைய பங்கும் கிடைக்காமல் போன அவலம், இந்தக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் இழிநிலைகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டச் சூழல் ஆகிய அனைத்துமே அப்பட்டமான அக்கிரமங்களாக, உரிமைமீறல்களாக இருந்தன. அக்கிரமங்களும் கொடுமைகளும் எல்லை மீறிப் போகும்போது அவற்றுக்கு எதிராகக் கலகம் வெடிக்கின்றது. இந்த நாடுகளில் இதுதான் நடந்திருக்கின்றது.
அத்துடன் இந்த நாடுகளில் ஒருபக்கம் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உரக்க முழங்கப்பட்டு வந்தது. மறுபக்கம் சமூக வாழ்விலும் பிற கூட்டு விவகாரங்களிலும் இஸ்லாமிய போதனைகள் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அதற்குப் பதிலாக மேற்கத்திய சித்தாந்தங்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டு வந்தன. இஸ்லாத்திற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. இதனை இந்நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கின்றார்கள். இந்த அவலத்தைப் பார்த்து கவலைப்பட்டு வந்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்களில் அதிகமாக இருந்தார்கள்.

எகிப்தில் அதிபர் நாஸர் காலத்திலிருந்து இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது பற்பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இக்வான் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.  இக்வான்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இக்வான் இயக்கம் தடை செய்யப்பட்டது. இக்வான்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்கும் ஈடிணை இல்லை. கம்யூனிஸ்ட் நாடுகளில் நடந்த அக்கிரமங்களை வேண்டுமானால் அதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த வரலாற்றை நம்மில் அனைவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம்.

பல பத்தாண்டுகளாக இக்வான் இயக்கம் மீது பலவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. இப்போது அந்த இயக்கத்திற்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது; ஒரு வலுவான சக்தியாக அது மிக வேகமாக பேருருவம் எடுத்து வருகின்றது. அதன் சக்தியை உலக நாடுகள் உணரத்தொடங்கியிருக்கின்றன.  எகிப்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்ற வலுவான இயக்கம் ஒன்று இருக்கின்றதெனில் அது இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம்தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஹுஸைன் ஒபாமா ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

ஆனால், இந்த வேளையில் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பணியாற்றினால் நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் ஆதரவு கிடைக்காது. இன்று வரை ஆட்சியில் இருந்த சக்திகள் - இஸ்லாத்திற்கு எதிராகச் செயலாற்றி வந்த சக்திகள் - மீண்டும் இக்வானின் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக வீறு கொண்டு எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என்றே இக்வானிகள் நினைக்கின்றார்கள். எனவே முதற்கட்டமாக நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுவதற்காகப் பாடுபடுவது; அதற்காக உரத்துக் குரல் கொடுப்பது என்கிற வியூகத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகச் சூழல் தழைத்தோங்கினால் எகிப்தியர்கள் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைத்துவிட்டால் எகிப்து மக்களுக்கு இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தவொரு சிஸ்டத்தை ஏற்றுக் கொள்கின்ற வாய்ப்பே இருக்காது என்று அவர்கள் கணித்திருக்கின்றார்கள்.

உண்மை என்னவெனில் இன்று லிபியாவிலும் சரி, பஹ்ரைனிலும் சரி, சிரியாவிலும் சரி, ஏமனிலும் சரி எங்குமே இஸ்லாம் விவாதப்பொருளாக ஆகவே இல்லை. இந்த நாடுகளில் அடக்குமுறை, கொடுமை, பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகத்தான் மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். அதே சமயம் இந்த நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்து மக்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்ற உரிமையும் சுதந்திரமும் கிடைக்கின்ற போது அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் இஸ்லாத்தையே விரும்புவார்கள் ; இஸ்லாத்தின்படி கூட்டுவாழ்வைக் கட்டமைக்க நாடுவார்கள் என்றே உறுதியாக நம்பலாம்; எதிர்பார்க்கலாம்.
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் 

Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

அமீரே ஜமாஅத் பேட்டி - இரண்டாம் பாகம்


m உலகளாவிய அளவில் விவாதிக்கப்படுகின்ற, கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகின்ற விவாதப் பொருளாக இஸ்லாத்தை ஆக்க வேண்டும்; இவ்வாறாக உலக அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரப் புயலிலிருந்து வெளி வருகின்ற பாதை புலப்பட்டுவிடும் என்றும் நீங்கள் சொல்லி வந்துள்ளீர்கள். இப்போது மேற்கத்தியர்களும் எந்தவிதமான பக்கச்சார்பும் இல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இஸ்லாத்தை ஆராய்வதற்கு முன் வந்துள்ளார்கள் என இப்போது தோன்றுகின்றது. இது தொடர்பாக அண்மையில் வெளியான ‘ஏ வர்ல்ட் வித் அவுட் இஸ்லாம்’ என்கிற நூலைச் சொல்லலாம். அமெரிக் உளவு நிறுவனமான ஸி.ஐ.ஏ.வில் பல்லாண்டுகள் பணியாற்றிய மூத்த உளவுத்துறை அதிகாரி கிரஹாம் ஃபுல்லர் என்பவர் இந்த நூலை எழுதியிருக்கின்றார். மேற்கிலும் கிழக்கிலும் இந்த நூல் பரவலாகப் பேசப்படுகின்றது. இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய உலகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை பக்கச்சார்புள்ளது; துவேஷமும் காழ்ப்பு உணர்வும் கொண்டது என்று கிரஹாம் ஃபுல்லர் கடுமையாக விமர்சித்து ஒதுக்கியிருக்கின்றார். இஸ்லாத்தை அதன் மூல நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன் வர வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம் என்றெல்லாம் அவர் எழுதியிருக்கின்றார். இதனை வரவேற்கத்தக்க மாற்றம் என்று சொல்லலாமா?  


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தாகத்தை உண்டுபண்ணியிருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பை அது உருவாக்கியிருக்கின்றது என்பதும் சரியே.
கிரஹாம் ஃபுல்லர் எழுதிய புத்தகத்தையும் நாம் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். என்னால் அந்த நூலை முழுமையாக வாசிக்க இயலவில்லை. என்றாலும் அந்த நூல் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். கிரஹாம் ஃபுல்லரின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கத்திய உலகம் இஸ்லாத்தைப் போட்டியிடுகின்ற சக்தியாகத்தான் காலங்காலமாகப் பார்த்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் அது இஸ்லாத்தை கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கி வருகின்றது. நிலைமைகளுக்கேற்ப இந்த விமர்சனங்களின் பாணியும் இலக்கும் மாறும். அவர்கள் சில சமயம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே குறிவைத்து விமர்சிப்பார்கள். சில சமயம் அண்ணல் நபிகளாரின் அழகிய வாழ்வை விமர்சிப்பார்கள். சில சமயம் வஹீ, தூதுத்துவ ஏற்பாட்டை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை விமர்சிப்பார்கள். சில சமயம் இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குவார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்பது ஒரு புறம் இருக்க கேலி, கிண்டல்களாகவும் இவை ஆக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில் 9/11க்குப் பிறகு இஸ்லாத்தை பயங்கரவாதத்தின் ஊற்றாகச் சித்திரிப்பதற்கு திட்டமிட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய இயக்கங்களைக் குறி வைத்து விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன. இன்னும் ஒரு படி மேலே போய் பயங்கரவாதம், வன்முறை, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றைத் தூக்கி வைத்துக்கொண்டாடுவதுதான் இஸ்லாம்; இந்த இயக்கங்களும் அதிலிருந்துதான் வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் பெறுகின்றன என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அவதூறுகள் பரப்பப்பட்டன.
கிரஹாம் ஃபுல்லர்
ஆனால் எந்தவித பக்கச்சார்பும் இல்லாமல், இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைக் குறித்தோ எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், எந்தவித முன்முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன் இஸ்லாத்தை ஆழ்ந்து படிக்கின்ற எவரும் இஸ்லாத்திற்கு எதிரான இந்தப் பரப்புரைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை; அடிப்படையற்றவை என்கிற முடிவுக்கே  வருவார். கிரஹாம் ஃபுல்லரும் அவருடைய நூலும் இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.
என்னைக்கேட்டால் எந்தவொரு விவகாரத்திலும் இஸ்லாத்தின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காக முயல்வாரேயானால் அவர் நிச்சயமாக நீதியும் நியாயமும் செறிந்த அதன் போதனைகளில் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்; இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படுகின்ற ஆட்சேபங்களை அடிப்படையற்றவை என ஒதுக்கித்தள்ளிவிடுவார் என்றே சொல்வேன். என்றாலும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வகையான ஆய்வு இஸ்லாத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவோ, இஸ்லாத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்ட ஆய்வாகவோ அமைந்துவிடுகின்றன. இதுதான் இவ்வகையான ஆய்வுகளில் பொதிந்து இருக்கின்ற குறை ஆகும்.
இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத்தொடங்கும்போது முதலில் அதன் அடிப்படைகள், அடிப்படைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். பிறகு அதன் ஒளியில் குறிப்பிட்ட பிரச்னையில் அது முன்வைக்கின்ற போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு முயல வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகள்தாம் அதன் அடிப்படைகளாக இருக்கின்றன. இஸ்லாம் நாத்திகத்தையும் இணைவைப்பையும் எதிர்க்கின்றது. அவற்றுக்கு எதிராக கலப்படமற்ற, மாசற்ற தூய்மையான ஓரிறைக் கோட்பாட்டை அது முன்வைக்கின்றது. அது இந்த உலக வாழ்வை மனிதனின் இறுதி இலக்காகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக மறுமை, நற்கூலி, தண்டனை பற்றியக் கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. அறிவைத் தேடியடைவதற்காக மனிதனுக்குக் கிடைத்திருக்கின்ற வழிவகைகளை அது போதுமானவையாகக் கருதுவதில்லை. இறைவழிகாட்டுதல் இன்றி மனிதனால் வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக்கொள்ள முடியாது என அது அழுத்தம்திருத்தமாக வாதிடுகின்றது. அதற்காக வஹீ, தூதுத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வது அவசியம் என அது அறிவிக்கின்றது. அண்ணல் நபிகளாரை இறுதித்தூதராகவும் திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அறிமுகப்படுத்துகின்றது. அது மனிதனை இறைவனின் அடியானாக, இறைவனிடம் பதில் அளிக்கக் கடமைப்பட்டவனாக அறிவிக்கின்றது. மனிதர்களிடையே சமத்துவம் கட்டிக்காக்கப்பட வேண்டும்; மனிதநேயம் மலர வேண்டும் என்றே அது எதிர்பார்க்கின்றது. மனிதன் மீது இன்னொரு மனிதனின் ஆதிக்கத்தை தவறு என்று அது ஒதுக்குவது இந்த சமத்துவத்தின் ஒரு பரிமாணம்தான். அதற்குப் பதிலாக இறைவனின் ஆட்சி என்கிற கருத்தோட்டத்தை அது முன்வைக்கின்றது. இஸ்லாத்தின் இந்த அடிப்படைக் கோட்பாடுகளையும் போதனைகளையும்தான் விவாதப் பொருளாக ஆக்க வேண்டும்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளில் பொதிந்துள்ள விவேகங்கள் ஏராளம். ஏராளம். இன்னும் அதிகமான விவேகங்களையும் தேடியடைய முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் ஃபைனல் அத்தாரிட்டி என்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்வாரேயானால் அது முன்வைக்கின்ற எந்தவொரு போதனை குறித்தும் அவர் ஆட்சேபிக்க மாட்டார். ஆனால் இப்போது எழுதப்படுகின்ற புத்தகங்களில் இந்தக் கோணத்தில் எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை. இந்தக் கோணத்தில் இந்தப் பாணியில் இஸ்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுஜீவிகள் குர்ஆனின் அடிப்படைக்கோட்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்றும்தான் நாம் விரும்புகின்றோம்.  

m  இன்று இந்தியாவின் தற்போதையச் சூழலில் நாம் இவ்வாறு இஸ்லாத்தை இந்தக்கோணத்தில் ஆராய வேண்டும் என்றெல்லாம் பேசலாமா? இந்தப் பாணியில் நாம் செய்தியை எடுத்துரைக்கலாமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நமது நாட்டில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சிந்தனை, செயல் ஆகியவற்றுக்கான முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. தமது மதம்தான் சத்தியமானது என நிறுவுகின்ற உரிமையும் சுதந்திரமும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. இது இந்தச் சுதந்திரத்தின் ஒரு பரிமாணம் ஆகும்.

எந்தவொரு சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொள்கின்ற, அதன்படி வாழ்கின்ற, அதனைப் பரப்புரை செய்கின்ற உரிமை இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு எனும்போது அதிலிருந்து மதத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது ஜனநாயகத்திற்கு நேர் எதிரானதாகும். இந்த உரிமை இல்லையெனில் கருத்து சுதந்திரம் என்பதற்கு என்னதான் பொருள்?

அரசியல் விவகாரங்களிலிருந்து மதத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது என்பதில் எவ்விதச் சந்தேகத்திற்கும் இடம் இல்லை. ஆனால் மதத்தை அரசியலிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற இந்தச் சிந்தனை மேற்கத்தியர்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனையாகும். இதனைச் சரியானது எனச் சொல்ல முடியாது. இதனைக் குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

m  நம்முடைய நாட்டில் கம்யூனிஸத்தை ஓர் சித்தாந்தமாக, ஐடியாலஜியாக அறிமுகப்படுத்துகின்ற உரிமை தரப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாத்தை வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்துகின்ற உரிமை பொதுவாக முஸ்லிம்களுக்கும் குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமியினருக்கும் உண்டு என்பது இன்று வரை ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: ஒரு காலத்தில் கம்யூனிஸத்திற்கு ஆதரவான போக்கு நம் நாட்டில் இருந்துள்ளது. வளரும் நாடுகளின் ஈடேற்றம் சோஷலிஸத்தைப் பின்பற்றுவதைப் பொருத்தே அமையும் என்றெல்லாம் மக்கள் நினைத்துவந்தார்கள். இதனால் இங்கு செழித்தோங்கி வளர்வதற்கான வாய்ப்பு கம்யூனிஸத்திற்குக் கிடைத்தது.

நம்முடைய நூல்களில் மனிதர்களுக்கு இஸ்லாம்தான் சரியான வாழ்க்கை முறை எனத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்குப் பொருத்தமான வாழ்க்கை முறை இஸ்லாம்தான் என்பதை நிறுவவும் அதன் அடிப்படையில் மட்டுமே தனி மனிதனின் வளர்ச்சி, சமூகத்தின் கட்டமைப்பு, அரசமைப்பு ஆகிய அனைத்தும் அமைய வேண்டும் என்பதை நிறுவுவதற்கும் அழுத்தம்திருத்தமாகப் பதிய வைப்பதற்கும் முயன்றிருக்கின்றோம். ஆனால், எந்த அளவுக்கு ஓங்கி, உரத்த குரலில் இந்தச் செய்தி முழங்கப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஆணித்தரமாக, முழு வலிமையுடன் இந்தச் செய்தி எடுத்துரைக்கப்படவில்லை என்பதை உங்களால் மறுக்க முடியாது.

இந்தச் செய்தியை எடுத்துரைப்பதற்கு நாட்டின் அமைப்புச்சட்டம் தடையாக இருக்கின்றதெனில் அமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய அந்தத் தடையைப் போக்குவதற்காக வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. 

m
 
மாண்புகளையும் விழுமங்களையும் உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் இருந்த ஜமாஅத்தே இஸ்லாமி இன்று அந்த மாண்புகளிலிருந்து படிப்படியாகப் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது என்று ஓர் எண்ணம் காணப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக ஜமாஅத் வெளியிட்டுள்ள பாடநூல்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதைச் சொல்லலாம். இந்தத் திருத்தங்கள் மார்க்கத்தின் திசையை மாற்றுவதாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ‘திருவிழா - மேளா’ என்கிற பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடலில் இணைவைப்பு, நாத்திகம் தொடர்பான வரிகள் இப்போது இல்லை.

இதற்கு என்ன பொருள்?

நீங்கள் எந்த விவாதத்தைத் தொடங்க விரும்பியிருந்தீர்களோ அதிலிருந்து நீங்களே பின்வாங்கிக்கொண்டிருக்கின்றீ
்கள் என்பதுதானே! இன்று நாம் நம்முடைய மார்க்க பாட நூல்களில் இவ்வாறு கொள்கைப்பூர்வமான அனைத்து விஷயங்களையும் நீக்கிவிட்டிருக்கின்றோம். இது எதனை உணர்த்துகின்றது? மீண்டும் பழைய சிந்தனையின் பக்கம் திருப்பி விட விரும்புகின்றோமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இந்த எண்ணம் சரியானதன்று. இஸ்லாத்தின் அடிப்படையில் தனி மனித வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு, அரசமைப்பு ஆகியவை அமைய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம். நம்முடைய அமைப்புச் சட்டத்தின் ஒளியில்தான் இவ்வாறு சொல்கின்றோம். ஆனால் நாம் இந்தச் செய்தியை நம்மவர்கள் மத்தியில் மட்டுமே குறுக்கிக் கொண்டிருக்கின்றோம்; அதன் பொதுமக்கள் மத்தியில் விவாதப்பொருளாக ஆக்கத் தவறிவிட்டோம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

இன்று தனி மனிதனின் வளர்ச்சி குறித்து பொதுவாகப் பேசப்படுகின்றது. இஸ்லாம் காட்டுகின்ற நெறிமுறைகளின்படி தனி மனிதனின் வளர்ச்சியை ஈட்டலாம் என்று நீங்கள் எடுத்துரைக்கலாம். இதே போன்று இஸ்லாமிய அறவுரைகளின்படி சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்பதையும் நாம் விளக்கலாம்.

சட்டம் பற்றிய விவாதம் வருகின்றபோது இயல்பிலேயே மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்கிற செய்தியை நாம் பதிய வைக்கலாம். மனிதர்கள் அனைவரும் சமம் எனும்போது எந்தவொரு மனிதருக்கும் வேறு மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அதிகாரமோ உரிமையோ இல்லை என்றும் அதற்கும் மேலாக மனிதர்கள் அனைவர் மீதும் இறைவனின் சட்டம் செல்லுபடியாகும் என்றும் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டவரும் இறைவனையே அதிகாரமும் ஆட்சியும் கொண்டவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய சட்டங்களின் அடிப்படையில் நிர்வாகம் செய்தாக வேண்டும் என்றும் பொருளாகின்றது. 
ஆனால் நாம் இந்த விவரங்களையெல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம் என்றே நான் கருதுகின்றேன். இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்று விவாதப்பொருளாக்க வேண்டும். இது தான் இன்றையத் தேவையாக இருக்கின்றது.

இன்று நிலைமை இஸ்லாத்திற்கு சாதகமாக இல்லை எனச் சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் உலக அளவில் வேகமாக நடந்துவருகின்ற மாற்றங்கள் புத்தெழுச்சியையும் புதிய சிந்தனையையும் வேண்டுகின்றன. இஸ்லாத்தின் ஒளியில் கருத்துரைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
 
m  ‘ஜமாஅத்தே இஸ்லாமி தொடக்கக்காலத்தில் என்னவோ செக்குலரிஸம், சோஷலிஸம், ஜனநாயகம் ஆகியவற்றை எதிர்த்து வந்தது. ஆனால் இப்போது அதன் போக்கு மாறிவிட்டது. இப்போதெல்லாம் அது அவற்றை ஆதரிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கும் மேலாக செக்குலரிஸமும் டெமாக்ரஸியும் சத்தியமானவை என்பதை நிறுவுவதில்தான் ஜமாஅத்தின் முழு கவனமும் உழைப்பும் குவிந்துள்ளன’ என்கிற எண்ணம் காணப்படுகின்றது. இப்போதெல்லாம் இந்த விமர்சனங்கள் அதிகமாகவே வெளிப்படையாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இது முழுக்க முழுக்க தவறான எண்ணம் ஆகும்.
இஸ்லாம் மனிதனின் அகத்தையும், புறத்தையும் - தனிப்பட்ட வாழ்வின் அம்சங்கள், கூட்டு வாழ்வின் பரிமாணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், ஒழுக்கவியல் முதற்கொண்டு பொருளியல் வரை, சமூகவியல் முதல் அரசியல் வரை என எல்லாவற்றையும் தழுவியதாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வின் எந்த ஒரு துறையும் இதன் எல்லைக்கு அப்பாற்பட்டது கிடையாது.

இறைஉவப்புக்கும் மறுமை வெற்றிக்கும் உத்தரவாதம் அளிக்கின்ற மார்க்கமும் இந்த தீன்தான்; அதே போன்று இன்-றைய உலக பிரச்னைகள் யாவற்றுக்கும் பொருத்தமான தீர்வைத் தருகின்ற உன்னத வாழ்க்கைத்திட்டமும் இந்த தீன்தான் என்றுதான் நம்முடைய அமைப்புச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. தனி மனித வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு, அரசின் வடிவமைப்பு ஆகிய அனைத்துமே இந்த தீனுக்கு இணக்கமாக அமைகின்ற அளவுக்கு மனிதனின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இந்த தீன் அழுத்தமாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஜமாஅத்தின் அமைப்புச்சட்டம் அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கின்றது.

இந்நிலையில் ஜமாஅத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் செக்குலரிஸத்தையும் ஜனநாயகத்தையும் சத்தியமானவை  என நிறுவுவதற்காக முயல்கின்றார் எனில் அவருடைய அந்த எண்ணமும் முயற்சியும் ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். அதன் பிறகு அவர் எந்த அடிப்படையில் ஜமாஅத்தில் தொடர்ந்து இருக்க முடியும்? அவர் ஜமாஅத்தில் நீடிப்பதற்கு எத்தகைய இடமும் இல்லை; வாய்ப்பும் இல்லை.

‘இன்றைய நாட்டுநிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு முன்பாக இஸ்லாத்தை மாற்று வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்த வேண்டும் ; அதன் மூலம் மனிதர் களின் உலக, மறுமை வெற்றிகளுக்கும், ஈடேற்றத்திற்கும் இஸ்லாம் உறுதியளிக்கிறது; மனித சமூகத்திற்கு மிக மிகப் பொருத்தமான வாழ்வியல் நெறியாக இஸ்லாம் இருக்கின் றது என்பதை நாட்டு மக்களிடம் நல்ல முறையில் விளக்கவும் ஜமாஅத் விரும்புகின்றது. தீனை நிலைநாட்டுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முன்னெடுத்து வைக்கப்படுகின்ற முக்கியமான நடவடிக்கை ஆகும் இது.’ என்றே நம்முடைய கொள்கை - செயல்திட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் ஜமாஅத்தே இஸ்லாமி செக்குலரிஸ, ஜனநாயக கொடியைத் தூக்கிப்பிடித்திருக்கின்றது என்று எவர்தான் சொல்லத் துணிவார்? அழைப்பியல், சமூகம், சமூக சீர்திருத்தம் போன்ற பல்வேறு களங்களில் ஜமாஅத் மேற்கொண்டிருக்கின்ற பணிகளை அறியாதவர்தான் அவ்வாறு சொல்லக்கூடும். அல்லது ஜமாஅத் மேற்கொண்டிருக்கின்ற பணிகளை ஒதுக்கித்தள்ளிவிட விரும்புகின்றவர்தான் அவ்வாறு சொல்லக்கூடும்.
ஜமாஅத் தன்னுடைய அமைப்புச்சட்டத்தையும், தன்னுடைய கொள்கையையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தையும் செகுலரிசத்தையும்   நிலைநாட்ட வேண்டும் என்று எப்போது, எங்கு, எந்த வேளையில் முடிவெடுத்தது என்பதை அறிந்துகொள்ளவே நான் விரும்புவேன்!
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

Friday, May 27, 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! 
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம் மௌலானா அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை.

மத்தியப் பிரதிநிதிகள் சபையின் கடைசி அமர்வையும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது ஏப்ரல் 31 ஆம் தேதியிட்ட தஅவத் இதழில் அமீரே ஜமாஅத் அவர்களின் பேட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்களோ அடுத்தடுத்த தினங்களில் இன்னும் அதிகமாகப் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணங்கள் வேறு! இந்த நிலைமையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டுவிட அது தொடர்பான கேள்விகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று.

இவ்வாறாக, பல்வேறு பிரச்னைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மௌலானா அவர்களுடன் பல மணிநேரம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.வெவ்வேறு நாட்களில் மூன்று அமர்வுகளில் இந்த உரையாடல்கள் நடந்தன.

மௌலானா அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எல்லாவற்றைக் குறித்தும் விரிவாக விடையளித்தார். பேட்டி நீண்டுவிட்டதால் மௌலானா அவர்களின் அனுமதியுடன் சில கேள்விகளுக்கான விடைகளின் சில பகுதிகளை நீக்கி சுருக்க வேண்டி வந்தது.

இவ்வாறாக, பல்வேறு விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த, இரத்தினச் சுருக்கமான, நிறைவான விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன.  பேட்டியின் தொகுப்பை அமீரே ஜமாஅத் அவர்களும் ஒரு பார்வை பார்த்துக் கொடுத்துள்ளார்.

சற்றே காலதாமதமாக இந்த நேர்காணல் அச்சானாலும் மன நிறைவைத் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். முஸ்லிம் உம்மத், இஸ்லாமிய இயக்கம், நாட்டுப் பிரச்னைகள், சமுதாயச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இதனை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டுநடப்பு, நிகழ்வுகள் பற்றிய மௌலானாவின் தாக்கங்களும், எண்ணங்களும் அவ்வப்போது வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
- பர்வாஸ் ரஹ்மானி, ஆசிரியர், தஅவத் வாரம் இருமுறை


m ஜமாஅத் உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை உங்களைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மிகப் பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள். நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
முதல் தடவையாக என் மீது இந்தப் பொ-றுப்பு சுமத்தப்பட்ட போது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவாற்றல், இறையச்சம், இறைப்பற்று, ஞானம், மதிநுட்பம், அர்ப்பணிக்கும் பண்பு, இறைவழியில் நிலைத்து நிற்றல் போன்ற அனைத்திலும் மற்றவர்களை விட கடைகோடியில் இருப்பவனாகத் தான் என்னை நானே பார்த்தேன். நான்கு ஆண்டுகள் இந்தப் பொறுப்பைச் சுமந்த பிறகு அந்த உணர்வு இன்னும் கூடியிருக்கின்றது.

உண்மை என்னவெனில், வாழ்க்கைத் திட்டம் பற்றிய புரட்சிகரமான பார்வையைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த விழைகின்ற, இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் சாதாரண வேலை அன்று. ஆனால் ஜமாஅத் இந்த எளியவன் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். கடந்த நான்காண்டுகளில் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றது; என்னுடைய கவலையைப் போக்குகின்றது.

அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபைக்கும் அருளுக்கும் அடுத்ததாக இயக்கத் தோழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி வரும் நாட்களிலும் எனக்கு இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் இயக்கம் வெற்றிப்பாதையில் மேன்மேலும் முன்னேறிச் செல்லும் என்றும் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்

m மத்திய தலைமையகச் சூழலைக் குறித்துச் சொல்லுங்களேன். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத் தலைமையகத்துடன் இணைந்து இருந்திருக்கின்றீர்கள். பன்னிரு ஆண்டுகள் அகில இந்தித் துணைத் தலைவராக (1991-இலிருந்து) செயல்பட்டிருக்கின்றீர்கள். எனவே மத்தியத் தலைமையகமும் அதன் சூழலும் உங்களைப் பொறுத்த வரை அந்நியமான சூழல் கிடையாது. என்றாலும் நீங்கள் அமீரே ஜமாஅத்தாகச் செயலாற்றிய இந்த நான்கு ஆண்டுகளில் மத்தியத் தலைமையகச் சூழல் குறித்து உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்களேன்

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
இந்தக் கேள்வி இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. முதலா-வது மத்தியத் தலைமையகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்-கொருவர் கொண்டுள்ள உறவு பற்றியது. இந்தக் கோணத்-தில் பார்த்தால் மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது. மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றுகின்ற பொறுப்பாளர்கள், ஊழியர்கள்  மத்தியில் அன்பும் இணக்கமும் தூய எண்ணமும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலைபெற்றுள்ளது. அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த எளியவனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. தலைமையகத்தில் இருக்கின்ற நாம் அனைவருமே ஒரே டீமாக, குழுவாகச் சேர்ந்து செயலாற்றி வருகின்றோம்.

இரண்டாவது பரிமாணம் இறைத்தொடர்பு, தஸ்கியா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் சில தோழர்கள் மிக மிக பாராட்டத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் நம் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.

சில சகோதரர்களிடம் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தங்களின் பலவீனங்களை அவர்கள்  உணர்ந்திருக்கின்றார்கள். இது மகிழ்ச்சியளிக்கும செய்தியாகும். சகோதரர்களுக்கு அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் குறித்து உணர்த்தும்போது எவருமே முகம் சுளித்ததில்லை; அதிருப்தியடைந்ததில்லை. இனி வருங்காலத்தில் அவர்கள் தங்களின் பலவீனங்களைக் களைந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த மீக்காத்-தில் (2007 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில்) சில இலக்குகளை நிர்ணயித்திருந்-தது. எடுத்துக்காட்டாக, உறுப்பினர்களின் எண்ணிக்-கையை அதிகரித்தல், ஊழியர்களின் எண்ணிக்-கையை நான்காண்டுகளில் இரட்டிப்பாக்குதல் என இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அந்த இலக்குகளை அடைந்து விட்டீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
சென்ற மீக்காத்தில் உறுப்பினர், ஊழியர் எண்ணிக்கையைப் பெருக்குதல் தொடர்பாக மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இஸ்லாமிய சமூகம், இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பு, மகளிர் மத்தியில் பணியை விரிவுபடுத்துதல், மக்கள் சேவை, கல்வி, பயிற்சி, அமைப்பு நிர்வாகம் எனப் பல்வேறு களங்களிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இவற்றில் பெரும்பாலான களங்களில் இலக்குகளை அடைவதில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்! 

அழைப்பியல் களத்தில் நாம் நிறையவே செய்திருக்கின்றோம். பொதுச்செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையில் இது எடுப்பாகச் சொல்லப்பட்டிருந்தது. சிலக்  களங்களில் அய்ம்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.

இஸ்லாமிய சமூகத் துறையை எடுத்துக் கொண்டால் நம் வசம் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கின்றோம்.

எல்லா மாநிலங்களிலும் உறுப்பினர்கள் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி அகில இந்திய அளவில் உறுப்பினர்களுக்கான மாநாடும் தில்லியில் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள், மாநாடுகள் ஆகியவற்றால் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற சமூக அமைப்புகளுடன் தொடர்பும் உறவும் வளர்ந்துள்ளன.  மக்கள் சேவைக்கான மிகப் பெரும் திட்டங்கள் மிகப் பெரும் அளவில் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய வங்கியியலை நிறுவுதல் தொடர்பாக சென்ற மீக்காத்தில் மிக அதிக அளவில் பல்வகை நடவடிக்கைகள்  முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சித் துறையோ புதுமையான உத்திகளை மேற்கொண்டது. பயிற்சித் துறைச் செயலாளார் பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். வாய்ப்புள்ள இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தனியாக சந்தித்துப் பேசினார். அவர்களின் சிந்தனையையும் மனோபாவத்தையும் புரிந்துகொள்ள முயன்றார். சீர்திருத்தத்தின்பக்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட மாநில ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தொடர்பான தம்முடைய அறிக்கையைச் சமர்ப்பித்தார். இனி வருங்காலத்தில் செய்ய வேண்டியவன குறித்து ஆலோசித்தார். இதற்காக வேண்டி நடந்த மாநில ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் அகில இந்தியத் துணைத் தலைவர் அகில இந்தியத் துணைத் தலைவர் மௌலானா முஹம்மத் ஜஃபர் தலைமை வகித்தார்.

முந்தைய மீக்காத்துக்களோடு ஒப்பிடும் போது அவற்றை விட சென்ற மீக்காத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி இருக்கின்றது. ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்ததைப் போன்று ஊழியர்களின் எண்ணிக்கை பெருகவில்லை. ஊழியர்களின் எண்ணிக்கை விகிதம் குறைவாகத்தான் நீடிக்கின்றது. இந்த விஷயத்தில் தீவிரக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இலக்குகளை அடைகின்ற விஷயத்தில் அனைத்து மாநிலங்களின் நிலைமையும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில மாநிலங்களில் அதிக அளவில் வேலை நடந்திருக்கின்றது. சில மாநிலங்களில் குறைந்த அளவே பணி நடந்திருக்கின்றது.

மேன்மேலும் போராடுவதற்கான வாய்ப்பையும் நல்லருளையும் இறைவன் தந்தருள்வானாக!

m அடிப்படையில் நீங்கள் ஒரு எழுத்தாளர். எழுத்தும் நூலாக்கமும்தாம் உங்களுடைய முதன்மைப் பணிகளாய் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பு அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு எழுத்துப் பணி எந்த நிலையில் உள்ளது? தலைவருக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவாறு எழுத்துக்கும் நூலாக்கத்திற்கும் நேரம் கொடுக்க முடிந்ததா? 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
கடந்த மீக்காத்தில் இடைவிடாத நிர்வாகப் பணிகள், இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்கு நடுவில் நேரத்தை உறிஞ்சியெடுத்து எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்த முயன்று வந்துள்ளேன்.

இவ்வகையில் கடந்த நான்காண்டுகளில் செய்து முடிக்கப்பட்ட பணிகளின் பட்டியல் பின்வருமாறு:

(1) நான் மீள்பார்வை செய்து கொடுத்த பிறகு என்னுடைய கட்டுரைகளின் தொகுப்புகள் இரண்டு வெளியாயின.  அவற்றில் ஒன்று ‘இஸ்லாமிய ஆய்வுகளில் ஃபிக்ஹு தொடர்பான விவாதங்கள்’ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பில் மிகவும் நுட்பமான, முக்கியமான ஃபிக்ஹு விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, தாருல் ஹரப், தாருஸ்ஸலாம் ஆகியவை தொடர்பான கருத்தோட்டங்கள், இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விவரம், முஸ்லிம் அல்லாதவர்களுடன் திருமணத் தொடர்புகள், ஷரீஅத்தில் இஜ்திஹாத் செய்தல் தொடர்பான நிலை, ஷரீஅத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற சட்ட அந்தஸ்து, கிஸாஸ், லிஆன் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் போன்றவற்றைக் குறித்து இந்தத் தொகுப்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவதாக வெளியான கட்டுரைத் தொகுப்பு ‘தஅவத் ஒ தர்பியத், இஸ்லாம் கா நக்தா ஒ நஜர்’.  அழைப்பியல், பயிற்சி தொடர்பாக நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது.

2) பின்வரும் நூல்கள் மீள்பார்வை செய்யப்பட்டு, புதியதாகத் தொகுத்துத் தரப்பட்டன.
1. அவ்ரத் - இஸ்லாமி முஆஷிரா மே. (பெண் - இஸ்லாமிய சமூகத்தில்.
2. அவ்ரத் அவ்ர் இஸ்லாம் (பெண்களும் இஸ்லாமும்)
3. இஸ்லாம் அவ்ர் முஷ்கிலாத்தே ஹயாத் (வாழ்க்கைப் பிரச்னைகளும் இஸ்லாமும்)
4. இன்ஸான் அவ்ர் உஸ்கே மஸாயில் (மனிதனும் அவனுடைய பிரச்னைகளும்)

இந்த நான்கு ஆண்டுகளிலும் அலிகரிலிருந்து தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற இஸ்லாமிய ஆராய்ச்சிக்கான காலாண்டிதழ் ஓரிதழ் கூட தவறாமல் குறித்த நேரத்தில் வெளியானது. இது ஒரு ஆய்வு இதழ் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனைத்  தொகுப்பதும் நடத்துவதும் மிகவும் சிரமமான, கடின உழைப்பையும் தீவிரக் கவனத்தையும் வேண்டுகின்ற பணி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அன்புச் சகோதரர் டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வியின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி தடையின்றி நடந்துவருகின்றது.

இத்துடன் சில சிற்றேடுகளும் இந்த நான்காண்டுகளில் வெளியாயின. தலைவர் பொறுப்பை ஏற்றவுடனே தஅவத் இதழிலும் பிற பத்திரிகைகளிலும் என்னுடைய நேர்காணல்கள் வெளியாயின. அந்த நேர்காணல்களின் தொகுப்பை மீள்பார்வை செய்த பின்பு ‘தற்போதைய நிலைமைகளில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயல்திட்டம்’ என்கிற பெயரில் சிற்றேடு வெளியிடப்பட்டது. இதில் தேசம், சமுதாயம், உலகம், இயக்கம் தொடர்பாகத் தொடுக்கப்பட்டக் கேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த முயலப்பட்டிருந்தது.

என்றாலும் இந்த நான்காண்டுகளில் எழுத்து, நூலாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எழுத்துப் பணிக்காகத் தேவைப்படுகின்ற மனஓர்மையும் கவனமும் நேரமும் கிடைக்காமல் போயிற்று. என்னுடைய கவனக்குறைவும் ஒழுங்கின்மையும் இதற்குக் காரணமாயின.

இனி வரும் நாட்களில் இந்தப் பலவீனங்களைக் களைவதற்கு முயல்வேன். இன்ஷா அல்லாஹ்

இஸ்லாமிய இயக்கத்திடம் தற்போது இருக்கின்ற இலக்கியம் இன்றைய இந்தியச் சூழலில் போதுமானதல்ல என நினைக்கின்றீர்களா? தற்போ-தைய இந்தியச் சூழலின் தேவைகளை நிறைவேற்று-கின்றவையாக அவை இல்லையெனில் புதியதாக, தற்போதைய காலகட்டத்துக்கேற்ப எழுதப்பட்ட நூல்களை வெளிக் கொணர்கின்ற திட்டம் இருக்கின்-றதா? அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்-கின்றனவா  ?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: என்னைப் பொருத்தவரை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்-டுள்ள நூல்கள் ஆகட்டும், அல்லது வேறு இஸ்லாமிய இயக்கம் வெளியிட்டுள்ள நூல்கள் ஆகட்டும் அவற்றில் மேற்கத்திய சிந்தனைகளை விட இஸ்லாம் தான் சிறப்பானது என்பதை நிறுவி, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான உணர்வைத் தோற்றுவிப்பதற்குத்தான் முயலப்பட்டிருக்கின்றது.

இந்தியப் பின்னணியைக் கருத்தில் கொண்டாலும் சரி, இந்தியாவுக்கு வெளியில் இருக்கின்ற உலகைக் கருத்தில் கொண்டாலும் சரி, இன்றும் சிந்தனைக் களத்தில் மேற்கத்தியர்களே மேலோங்கி நிற்கின்றனர். உண்மையில் நமக்குப் போட்டியாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகள்தாம்! மேற்கு முன்வைக்கின்ற அரசியல் சிந்தனைகள், அதன் பொருளாதாரம், அதன் ஒழுக்க மதிப்பீடுகள் ஆகியவைதாம் இன்று தீர்மானிக்கின்ற சக்திகளாய் வளர்ந்துள்ளன.

இந்தக் கோணத்தில் இந்த அடிப்படையில் இலக்கியங்களை - நூல்களை, ஆக்கங்களை- வெளியிடுவது அவசியமாகும்.

சிந்தனைக் களத்தில் செய்யப்படுகின்ற பணி இரண்டு வகையானவை. (1) நீடித்த, நிலையான மதிப்பைக் கொண்டவை. இதற்கு எடுத்துக்காட்டாக மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்களால் எழுதப்பட்ட குத்பாப் பேருரைகள், இதுதான் இஸ்லாம், இஸ்லாமியப் பண்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகிய நூல்களைச் சொல்லலாம். (2) குறிப்பிட்ட காலத்தியப் பிரச்னைகளை விவாதிப்பவை. இத்தகைய நூல்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் பற்றியெரிகின்ற பிரச்னைகள் குறித்து பேசுபவை. என்றாலும் இவற்றிலும் நூலாசிரியரின் அடிப்படை சிந்தனைகள் இழையோடிக் கொண்டிருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மஸ்லா ஏ கவ்மியத், மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் போன்ற நூல்களைச் சொல்லலாம்.

இங்கு இன்னொன்றையும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக சிந்தனைக்களத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு பணியும் குறிப்பிட்ட நிலைமைளிலும் சூழல்களிலும் பின்னணியிலும்தான் அரங்கேறுகின்றன. எனவே நூல்களை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட காலத்துச் சூழல்கள், பின்னணி போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் சில சமயம் தேவையற்றக் குழப்பங்களுக்கு ஆளாகக் கூடும்.

புதியதாக நூல்களை வெளியிடுவதைப் பொருத்த வரை இன்று நிலைமைகள் பெரும் அளவுக்கு மாறிவிட்டன. அரசியல் புரட்சிகள், மேற்கத்திய பண்பாட்டுத் தாக்குதல்கள், புதிய பொருளாதார மாற்றங்கள் எல்லாமே புதியதாக நூல்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே பணி நடந்துள்ளது. நேரத்தையும் திறமையையும் ஆற்றலையும் வேண்டுகின்ற பணி இது. ஜமாஅத்துக்கு இவையனைத்தும் கிடைத்திட இறைவனிடம் பிரார்த்தியுங்கள். 

நூலாக்கக் களத்தில் உங்களுடைய பங்களிப்புகள் என்ன? தனிப்பட்ட முறையில் நீங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்துச் சொல்லுங்களேன். 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படாத, அதிகமாகச் சீண்டப்படாத விவாதப்பொருள்களை நான் எடுத்துக் கொண்டேன். எடுத்துக்காட்டாக என்னுடைய நூல்களில் ஒன்று ‘கைர் முஸ்லிமோ சே தஅலுக்காத் அவ்ர் உன் கே ஹுகூக்’ - முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ளலும் அவர்களின் உரிமைகளும்’.

இன்றையக் காலத்தில் முஸ்லிம்களில் அதிகமானோர் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் சிறுபான்மை மக்களாய் வாழ்கின்றனர். அத்தகையச் சூழலில் முஸ்லிம் அல்லாத மக்களுடன் எத்தகையத் தொடர்புகளை வைத்துக் கொள்வது என்பது அங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தியப் பின்னணியிலோ இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் பன்மடங்கு கூடிவிடுகின்றது.

இந்தக்கேள்வியோடு இணைந்து இருக்கின்ற கேள்வி என்னவெனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற, முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்டுள்ள நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் என்னென்ன? இதனைக் குறித்தும் நான் மேலே குறிப்பிட்ட நூலில் விவாதித்துள்ளேன்.

இதே போன்று இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்கள் மார்க்கக் கண்ணோட்டத்தில் எத்தகைய உரிமைகளைக் கோருவார்கள்? அவர்கள் அங்கு எத்தகைய பங்காற்றுவார்கள்? இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்களின் நடத்தையும் ஒழுக்கமும் எத்தகையதாக இருக்கும்?  போன்றக் கேள்விகளுக்கு விடை காணுகின்ற வகையில் நான் எழுதிய நூல்தான் ‘கைர் இஸ்லாமி ரியாஸத் அவ்ர் முஸல்மான்’ - (இஸ்லாம் அல்லாத அரசாங்கமும் முஸ்லிமும்). முஸ்லிம்கள் மீது பயங்கரவாதம், வன்முறை, தேசத் துரோகம் போன்ற பழிகள் சுமத்தப்பட்டு வந்தச் சூழலில் இந்த நூல் எழுதப்பட்டது.

இந்த உலகில் நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியமாகவும் வாழவே மனிதர்கள் அனைவருமே விரும்புகின்றார்கள். நோயுறும்போது அந்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவதும் அவனுடைய உரிமையாகும். நலமான வாழ்வை உறுதி செய்கின்ற அனைத்தையும் ஏற்பாடு செய்வதும், நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதும், சிகிச்சைக்கான வசதிகள் செய்து தருவதும் அரசாங்கத்தின் கடமைகளாகும்.

இந்த விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய அறவுரைகளின்
இஸ்லாம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகுகின்றது? எப்படித் தீர்க்கின்றது போன்றக் கேள்விகளுக்கு விடை காண்கின்ற விதத்தில் நான் எழுதிய நூல்தான் ‘ஸிஹத்-ஒ-மர்ஸ் : இஸ்லாமி தஅலிமாத் மே’ - உடல் நலமும் நோயுறுதலும் : இஸ்லாமிய அறவுரைகளின் ஒளியில்’

இதே போன்று மனித உரிமைகளும் மிக அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரச்னைகளே. மனித உரிமைகள் குறித்தும் குறிப்பாக பெண்களின் உரிமைகள் குறித்தும் நிறைய எழுதியிருக்கின்றேன். அவற்றைப் பற்றிய விவரங்களை விவரிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

த மதங்கள் பற்றிய ஆய்வு அவசியம்; குறிப்பாக இந்திய மதங்களை அறிந்துகொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் முயல வேண்டும். மதங்கள் குறித்து நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் கடந்த மீக்காத்தில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்னென்ன செய்யப்பட்டன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று உலகெங்கும் உலகாயதம் மேலோங்கியிருக்கின்றது. இதன் விளைவாகவும் வேறு பல காரணங்களாலும் ஆன்மீகத்தின் பக்கம் மக்கள் பெருமளவில் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளிலும் இந்தப் போக்கைப் பார்க்க முடியும்.

கிழக்கத்திய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் இந்த ஆர்வமும் ஆன்மிகத் தேடலும் எடுப்பாகத் தென்படுகின்றன. மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் குறித்தும் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசப்படுகின்றது.

சமூகத்தின் விதியைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மதம் இல்லை. என்றாலும் இந்தியா போன்ற நாடுகளில் மதங்கள் மக்களைக் கட்டிப்போட்டிருக்கின்றன. மதங்களின் செல்வாக்கு பெரும் அளவுக்கு ஓங்கியிருக்கின்றது. மக்களை மதங்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே மதங்கள் குறித்து ஆய்வு செய்வதும் வாசிப்பதும் அவசியமாகின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தத் தேவையை உணர்ந்தது. இதனை நிறைவேற்றுவதற்காக ஆக வேண்டியதைச் செய்வதற்கும் முன் வந்தது. என்றாலும் இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.

இருந்தாலும் இந்தக் களத்தில் சென்ற மீக்காத்திலும் அதற்கு முந்தைய மீக்காத்களிலும் ஒரளவுக்கு பணி நடந்திருக்கின்றது. குறிப்பாக இந்தக் களத்தில் மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் அவர்கள் எழுதியிருக்கின்ற ‘இஸ்லாம் கி அஹம்மியத் இந்து தரம் கி பஸ் மன்ஜர் மே’ - ‘இந்து மதத்தின் பின்னணியில் இஸ்லாத்தின் முக்கியத்துவம்’ என்கிற நூலையும் ‘தஸவ்வுரே ஆகிரத்:இந்துஸ்தானி மத்ஹபி குதுப் கி ரோஷ்ணி மே’ - ‘இந்திய மத நூல்களின் ஒளியில் மறுமை பற்றிய கண்ணோட்டம்’ என்ற நூலையும் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
‘மறுபிறவிக் கோட்பாடு: யதார்த்தமான ஆய்வு’ எனும் தலைப்பில் டாக்டர் முஹம்மத் அஹ்மத் எழுதிய நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும்.
‘இஸ்லாம் ஓர் இறைமார்க்கம்’ என்கிற தலைப்பில் டாக்டர் ராஜிந்தர் நாராயண் லஅல் அவர்களால் எழுதப்பட்டு மதுர் சந்தேஷ் வெளியிடப்பட்டுள்ள நூலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நூலாகும்.

பல்ரியா கஞ்சு ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த மௌலானா அனீஸ் அஹ்மத் மதனி அவர்கள் ‘மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு’ என்கிற தலைப்பில் 400 பக்கங்களைக் கொண்ட கனமான நூல் ஒன்றை எழுதியிருக்கின்றார். இதனைப் பதிப்பித்து வெளியிடுவதும் இன்ஷா அல்லாஹ் இந்தத் துறையில் பெரிதும் நன்மை அளிக்கும்.

இதாரா தஹ்கீக் தஸ்னீஃப் இஸ்லாமி (இஸ்லாமிய ஆய்வு நிறுவனமும்) இது தொடர்பாக சில குறிப்பிடத்தக்க நூல்களை வெளியிட்டுள்ளது. அன்பியா கிராம் கி தஅவத் (நபிமார்களின் அழைப்பு), தஅலிமாத்தே அன்பியா அவ்ர் குர்ஆன் (நபிமார்களின் போதனைகளும் குர்ஆனும்) ஆகிய இரண்டு நூல்கள் முக்கியமானவை. இவையிரண்டையும் டாக்டர் ரஜியுல் இஸ்லாம் நத்வி எழுதியிருக்கின்றார்.

இந்தத் துறையில் ஜமாஅத் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆற்றல் வாய்ந்த, வல்லமை மிக்க எழுத்தாளர்களை ஜமாஅத் உருவாக்கியிருக்கின்றது. இவர்கள் இந்தியாவில் இருக்கின்ற மதங்களை ஆழ்ந்து படித்திருக்கின்றார்கள். அதன் பிறகு இஸ்லாத்தின் ஒளியில் அவற்றைக் குறித்து கருத்துரைத்திருக்கின்றார்கள். இவர்களைப் போன்ற ஆற்றல் படைத்தவர்கள் இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். மற்ற மதங்களை நல்ல முறையில் ஆய்வு செய்த அனுபவமும் எழுத்தாற்றலும் கொண்ட வல்லுநர்கள் இருக்கலாம். இருந்தாலும் இந்தத் துறையில் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது என்பது உண்மையே.

m தனிப்பட்ட வணக்க வழிபாடுகளோடு இஸ்லாம் நின்றுவிடுவதில்லை. அது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவிய முழுமையான வாழ்க்கைத் திட்டம் என்பது பற்றிய விழிப்பு உணர்வு இந்திய முஸ்லிம்களிடம் மலர்ந்திருக்கின்றதா? இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அத்தகைய விழிப்பு உணர்வு இல்லை; சமூக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டிருப்பதற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்றும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தைத் தனிப்பட்ட விவகாரமாகத்தான் பார்க்கின்றார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. அவர்கள் அதனை தனிப்பட்ட விவகாரமாகவே எடுத்துக்கொள்கின்றார்கள். அதன் அடிப்படையில் ஒருசில மார்க்கக் கடமைகளையும் மேற்கொள்கின்றார்கள். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை ஒரளவுக்கு பேணி நடந்துகொள்கின்றார்கள். இவற்றில் பிழை ஏற்பட்டுவிட்டாலோ, குறை நேர்ந்துவிட்டாலோ அது மார்க்க விவகாரத்தில் ஏற்பட்டுவிட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இதே போன்று குடும்ப விவகாரங்களிலும் இயன்ற வரை இஸ்லாமிய போதனைகளின்படி நடந்துகொள்வதில் தக்கக் கவனம் செலுத்தப்படுகின்றது. நிகாஹ், குளா, தலாக், வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் மார்க்கத்தின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறையையும் கவனத்தையும் பார்க்க முடிகின்றது. குடும்ப வாழ்வு தொடர்பான விவகாரங்களில் மார்க்கப் போதனைகளுக்கு நேர்மாறாக நடப்பது குற்றம் என்கிற தெளிவும் சமுதாய மக்களிடம் நிறைந்துள்ளது.
ஆனால், வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்ட வந்த மார்க்கம்தான் இறைவனின் மார்க்கம்; வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இறைமார்க்கத்தின் வழிகாட்டுதல்களின்படியே நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தெளிவோ, நாம் எல்லோருமே ஒரே சமுதாயத்தவர்கள்தாம்; மார்க்க உறவுதான் நம் எல்லாரையும் பிணைத்திருக்கின்றது; சமுதாயத்தின் மகிழ்ச்சியும் துக்கமும் நம் அனைவருடைய மகிழ்ச்சியும் துக்கமும் ஆகும் என்கிற விழிப்பு உணர்வோ சமுதாய மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான் உண்மை. இறைவன் இந்தச் சமுதாயத்தை கைரே உம்மத் - சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கின்றான்; இந்தச் சமுதாயத்தைக் கொண்டு உலகைச் சீர்திருத்துகின்ற வேலையைச் செய்ய விரும்புகின்றான்; இறைவனின் மார்க்கம்தான் உலகில் செழிப்பைக் கொண்டு வரும்; மறுமையிலும் நமக்கு வெற்றியைத் தேடித்தர வல்லது அந்த இறைமார்க்கம் ஒன்றே என்கிற பரந்த எண்ணமும் விரிவான பார்வையும் சமுதாய மக்கள் மத்தியில் பசுமையாக நிறைந்திருக்கவில்லை.

இந்தக் களத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

m  சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது. சமுதாய ஒற்றுமை மலர்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து பாடுபட்டும் வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் உங்களுடைய தலைமையில் சமுதாய ஒற்றுமைக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? உங்களுடைய பார்வையில் இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் உள்ளது?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது என்றும் அதற்காக ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டும் வருகின்றது என்றும் மிகச் சரியாகச் சொன்னீர்கள்.  இந்த விஷயத்தில் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஜமாஅத் தொடர்நது முயன்று வந்துள்ளது. சமுதாயத்திலும் இது தொடர்பாகக் கவலையும் அக்கறையும் இருந்து வருகின்றது.

சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதற்காக ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், தீனி தஅலிமி கவுன்ஸில் போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஜமாஅத்தும் பங்கேற்றது; இந்த நிறுவனங்கள் திறம்படச் செயலாற்றுவதற்கும் ஜமாஅத் தொடர்ந்து உதவியும் ஒத்துழைப்பும் அளித்து வருகின்றது. இன்றும் இந்த நிறுவனங்களுடன் ஜமாஅத் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது.

கடந்த மீக்காத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முறையான முயற்சிகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான பொறுப்பாளர்களையும் சந்தித்தோம். இந்த முயற்சிகள், சந்திப்புகளின் பலனாக நல்ல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்!

ஜமாஅத் குறித்து நிலைபெற்றிருந்த தவறான கருத்துகள் பெரும் அளவுக்கு குறைந்துள்ளன. புதிய தொடர்புகளும் உறவுகளும் மலர்ந்துள்ளன. தேவ்பந்த் நிறுவனம் தன்னுடைய சில முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தது. நாங்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். இதே  போன்று அவர்களும் நம்முடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.

ஸஹாரபூர் மஸாஹிருல் உலூம், லக்னௌ நத்வத்துல் உலமா, ஜமிய்யத்துல் அஹ்லே ஹதீஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகள் வளர்ந்துள்ளன. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களுடனும் உறவுகள் வலுப்பெற்றுள்ளன. தென் இந்திய மார்க்க நிறுவனங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள மார்க்க அறிஞர்களுடனும் தொடர்புகள் அதிகரித்துள்ளன. எங்கிருந்தும் எந்தவொரு வகையிலும் எதிர்ப்பையும் இடைவெளியையும் வெளிப்படுத்துகின்ற யாதொன்றும் வெளிப்படவில்லை. அதற்கு மாறாக சேர்ந்து பணியாற்றுகின்ற விழைவும் ஒத்துழைக்கின்ற உணர்வும்தாம் மேலிட்டு நின்றன.

இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் இருக்கின்றது எனக் கேட்கின்றீர்கள். இது தொடர்பாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். சமுதாயத்தைப் பாதிக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற உணர்வு சமுதாயத்தில் மிகைத்தோங்கி நிற்கின்றது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்கின்ற விஷயத்தில் ஜமாஅத்தின் ஆற்றலும் செல்வாக்கும் பெரிதும் துணைநிற்கும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்களைப் போல சமுதாயத்தில் ஒற்றுமை நிலவுகின்றது என்று சொல்ல முடியாது. என்றாலும் அந்த நிலையை அடைவதற்கான தொடர்முயற்சிகள் தொடர்கின்றன.

m ஸ்லாத்தை ஓர் மாற்றாக (alternative) அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்றே நீங்கள் உங்களுடைய உரைகளிலும் ஆக்கங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகின்றீர்கள்.  இந்த விஷயத்தில் ஜமாஅத் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது? புதிய மீக்காத்தில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றது?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்க்கைத் திட்டங்களுக்கு மாற்றாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றே நான் என்னுடைய கட்டுரைகளிலும் கொற்பொழிவுகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளேன். இவ்வாறு நாம் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தாத வரை அழைப்புப் பணி முழுமையடையாது என்பதுதான் என்னுடைய வாதம் ஆகும்.

போதாக்குறைக்கு இன்று நாட்டிலும் உலகிலும் நிலவுகின்ற சூழல்களும் இதன் தேவையைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன. கடந்த மீக்காத்தில் வகுக்கப்பட்ட கொள்கை மற்றும் செயல்திட்டத்திலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நம்முடைய பணிகளின் திசை வரையறுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு வகையான சித்தாந்த வெற்றிடம் காணப்படுகின்றது. இன்று எவருக்குமே வாழ்க்கை திட்டம் பற்றிய விவாதத்தில் போவதற்கே விருப்பமில்லையோ எனத் தோன்றுகின்றது. எவருக்குமே சித்தாந்தம், வாழ்க்கைத்திட்டம் பற்றிய கவலை இல்லை. பொருளாதார வளர்ச்சி, செழிப்பான வாழ்க்கைதான் இவர்களுக்கு எல்லாமே. என்ன விலை கொடுத்தாவது அதனை அடைய இவர்கள் தயார்.

இந்த நிலையில் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத்திட்டம் தேவை என்பதை உணர வைப்பது நம்முடைய வேலை ஆகும். வாழ்க்கைத்திட்டம் தீர்மானிக்கப்படும்போதுதான் வாழ்வின் திசை நிர்ணயமாகும்.

இஸ்லாம் ஒரு வாழ்க்கைத்திட்டத்தை வழங்குகின்றது. மனிதனின் பொருளாதார, உலகாயதத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வழிகளையும் அவனுடைய மனம் நிம்மதி பெறுவதற்கான வழிமுறைகளையும் சொல்கின்ற வார்க்கைத் திட்டம் அது!

வணக்க வழிபாடுகளுக்காக அது வழங்கியுள்ள கட்டமைப்பு அதன் வாழ்க்கைத்திட்டத்துக்கு வலிமை சேர்க்கின்ற திறன் படைத்தது.

இவ்வாறாக வாழ்வின் ஒவ்வொரு துறைக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை விரிவாக விவரிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்று குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகின்றது. சமூகத்தின் அடித்தளம் குடும்ப அமைப்புதான். இன்று அதன் கட்டமைப்பு வேகமாக ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது. ஆனால் இஸ்லாம் அதனைக் கட்டமைப்பதற்கு வலுவான, தீர்க்கமான அடிப்படைகளை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஒழுக்கம், நடத்தை தொடர்பாக இஸ்லாம் வழங்குகின்ற அறவுரைகளும் நெறிமுறைகளும் தூய்மையான ஆளுமைகளைச் செதுக்கி வார்த்தெடுப்பதில் பெரும் பங்காகற்றுகின்றன. இந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளால் மனித உறவுகளும் துலங்குகின்றன.

இஸ்லாம் வழங்குகின்ற பொருளாதார அமைப்பு நீதமும் நியாயமும் செறிந்ததும் சமநிலை தவறாததும் ஆகும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையிலான மோதலிலிருந்து சமூகத்திற்கு விடுதலை அளிப்பது இஸ்லாம் கட்டமைக்கின்ற பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமே. இஸ்லாம் கட்டமைக்கின்ற சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான உறுதியை அளிப்பது இஸ்லாமிய பொருளாதார அமைப்பு மட்டுமே. ஆகுமான வழிகளில் பொருளைப் பெருக்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய பொருளாதாரக் கட்டமைப்பு அனுமதிக்கின்றது.

இஸ்லாம் வழங்குகின்ற அரசியல் கட்டமைப்பிலோ மனிதன் மீது மனிதன் ஆட்சி செலுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. மனிதனை மனிதனின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து மனிதர்கள் அனைவரையும் ஏக இறைவனின் அடிமைகளாக, ஏக இறைவனின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்குவது இஸ்லாம் தான்.

இஸ்லாத்தை மாற்றாக அறிமுகப்படுத்துகின்ற போக்கு இன்று ஜமாஅத் தோழர்களில் பரவியிருக்கின்றது. நமது பேச்சாளர்களும் சொற்பொழிவாளர்களும் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 
Related Posts Plugin for WordPress, Blogger...