Pages

Friday, May 27, 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! 
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம் மௌலானா அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பும் நேரமும் வாய்க்கவில்லை.

மத்தியப் பிரதிநிதிகள் சபையின் கடைசி அமர்வையும் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது ஏப்ரல் 31 ஆம் தேதியிட்ட தஅவத் இதழில் அமீரே ஜமாஅத் அவர்களின் பேட்டியை வெளியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால் மௌலானா அவர்களோ அடுத்தடுத்த தினங்களில் இன்னும் அதிகமாகப் பிஸியாகிவிட்டார். சுற்றுப்பயணங்கள் வேறு! இந்த நிலைமையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டுவிட அது தொடர்பான கேள்விகளையும் சேர்க்க வேண்டியதாயிற்று.

இவ்வாறாக, பல்வேறு பிரச்னைகள், வாய்ப்புகள், சவால்கள் குறித்து மௌலானா அவர்களுடன் பல மணிநேரம் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.வெவ்வேறு நாட்களில் மூன்று அமர்வுகளில் இந்த உரையாடல்கள் நடந்தன.

மௌலானா அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எல்லாவற்றைக் குறித்தும் விரிவாக விடையளித்தார். பேட்டி நீண்டுவிட்டதால் மௌலானா அவர்களின் அனுமதியுடன் சில கேள்விகளுக்கான விடைகளின் சில பகுதிகளை நீக்கி சுருக்க வேண்டி வந்தது.

இவ்வாறாக, பல்வேறு விஷயங்கள் குறித்து ஒருங்கிணைந்த, இரத்தினச் சுருக்கமான, நிறைவான விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன.  பேட்டியின் தொகுப்பை அமீரே ஜமாஅத் அவர்களும் ஒரு பார்வை பார்த்துக் கொடுத்துள்ளார்.

சற்றே காலதாமதமாக இந்த நேர்காணல் அச்சானாலும் மன நிறைவைத் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். முஸ்லிம் உம்மத், இஸ்லாமிய இயக்கம், நாட்டுப் பிரச்னைகள், சமுதாயச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இதனை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டுநடப்பு, நிகழ்வுகள் பற்றிய மௌலானாவின் தாக்கங்களும், எண்ணங்களும் அவ்வப்போது வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
- பர்வாஸ் ரஹ்மானி, ஆசிரியர், தஅவத் வாரம் இருமுறை


m ஜமாஅத் உறுப்பினர்கள் மீண்டும் ஒரு முறை உங்களைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மிகப் பெரும் பொறுப்பை உங்கள் மீது சுமத்தியிருக்கின்றார்கள். நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
முதல் தடவையாக என் மீது இந்தப் பொ-றுப்பு சுமத்தப்பட்ட போது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவாற்றல், இறையச்சம், இறைப்பற்று, ஞானம், மதிநுட்பம், அர்ப்பணிக்கும் பண்பு, இறைவழியில் நிலைத்து நிற்றல் போன்ற அனைத்திலும் மற்றவர்களை விட கடைகோடியில் இருப்பவனாகத் தான் என்னை நானே பார்த்தேன். நான்கு ஆண்டுகள் இந்தப் பொறுப்பைச் சுமந்த பிறகு அந்த உணர்வு இன்னும் கூடியிருக்கின்றது.

உண்மை என்னவெனில், வாழ்க்கைத் திட்டம் பற்றிய புரட்சிகரமான பார்வையைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த விழைகின்ற, இந்த நோக்கத்திற்காக நாடு முழுவதிலும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்ற ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் சாதாரண வேலை அன்று. ஆனால் ஜமாஅத் இந்த எளியவன் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். கடந்த நான்காண்டுகளில் இயக்கத் தோழர்களும் நண்பர்களும் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் எனக்கு மனநிறைவைத் தருகின்றது; என்னுடைய கவலையைப் போக்குகின்றது.

அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபைக்கும் அருளுக்கும் அடுத்ததாக இயக்கத் தோழர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அசாதாரணமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இனி வரும் நாட்களிலும் எனக்கு இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் இயக்கம் வெற்றிப்பாதையில் மேன்மேலும் முன்னேறிச் செல்லும் என்றும் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்

m மத்திய தலைமையகச் சூழலைக் குறித்துச் சொல்லுங்களேன். அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியத் தலைமையகத்துடன் இணைந்து இருந்திருக்கின்றீர்கள். பன்னிரு ஆண்டுகள் அகில இந்தித் துணைத் தலைவராக (1991-இலிருந்து) செயல்பட்டிருக்கின்றீர்கள். எனவே மத்தியத் தலைமையகமும் அதன் சூழலும் உங்களைப் பொறுத்த வரை அந்நியமான சூழல் கிடையாது. என்றாலும் நீங்கள் அமீரே ஜமாஅத்தாகச் செயலாற்றிய இந்த நான்கு ஆண்டுகளில் மத்தியத் தலைமையகச் சூழல் குறித்து உங்களுடைய உணர்வுகளைக் கூறுங்களேன்

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
இந்தக் கேள்வி இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. முதலா-வது மத்தியத் தலைமையகத்தில் இருப்பவர்கள் ஒருவருக்-கொருவர் கொண்டுள்ள உறவு பற்றியது. இந்தக் கோணத்-தில் பார்த்தால் மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது. மத்தியத் தலைமையகத்தில் பணியாற்றுகின்ற பொறுப்பாளர்கள், ஊழியர்கள்  மத்தியில் அன்பும் இணக்கமும் தூய எண்ணமும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலைபெற்றுள்ளது. அவர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த எளியவனுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. தலைமையகத்தில் இருக்கின்ற நாம் அனைவருமே ஒரே டீமாக, குழுவாகச் சேர்ந்து செயலாற்றி வருகின்றோம்.

இரண்டாவது பரிமாணம் இறைத்தொடர்பு, தஸ்கியா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் சில தோழர்கள் மிக மிக பாராட்டத்தக்க அளவில் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் நம் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றார்கள்.

சில சகோதரர்களிடம் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தங்களின் பலவீனங்களை அவர்கள்  உணர்ந்திருக்கின்றார்கள். இது மகிழ்ச்சியளிக்கும செய்தியாகும். சகோதரர்களுக்கு அவர்களிடம் இருக்கின்ற பலவீனங்கள் குறித்து உணர்த்தும்போது எவருமே முகம் சுளித்ததில்லை; அதிருப்தியடைந்ததில்லை. இனி வருங்காலத்தில் அவர்கள் தங்களின் பலவீனங்களைக் களைந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த மீக்காத்-தில் (2007 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில்) சில இலக்குகளை நிர்ணயித்திருந்-தது. எடுத்துக்காட்டாக, உறுப்பினர்களின் எண்ணிக்-கையை அதிகரித்தல், ஊழியர்களின் எண்ணிக்-கையை நான்காண்டுகளில் இரட்டிப்பாக்குதல் என இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அந்த இலக்குகளை அடைந்து விட்டீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
சென்ற மீக்காத்தில் உறுப்பினர், ஊழியர் எண்ணிக்கையைப் பெருக்குதல் தொடர்பாக மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இஸ்லாமிய சமூகம், இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பு, மகளிர் மத்தியில் பணியை விரிவுபடுத்துதல், மக்கள் சேவை, கல்வி, பயிற்சி, அமைப்பு நிர்வாகம் எனப் பல்வேறு களங்களிலும் இலக்குகளை நிர்ணயித்திருந்தோம். இவற்றில் பெரும்பாலான களங்களில் இலக்குகளை அடைவதில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்! 

அழைப்பியல் களத்தில் நாம் நிறையவே செய்திருக்கின்றோம். பொதுச்செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையில் இது எடுப்பாகச் சொல்லப்பட்டிருந்தது. சிலக்  களங்களில் அய்ம்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.

இஸ்லாமிய சமூகத் துறையை எடுத்துக் கொண்டால் நம் வசம் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கியிருக்கின்றோம்.

எல்லா மாநிலங்களிலும் உறுப்பினர்கள் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி அகில இந்திய அளவில் உறுப்பினர்களுக்கான மாநாடும் தில்லியில் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள், மாநாடுகள் ஆகியவற்றால் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற சமூக அமைப்புகளுடன் தொடர்பும் உறவும் வளர்ந்துள்ளன.  மக்கள் சேவைக்கான மிகப் பெரும் திட்டங்கள் மிகப் பெரும் அளவில் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இஸ்லாத்தின் பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய வங்கியியலை நிறுவுதல் தொடர்பாக சென்ற மீக்காத்தில் மிக அதிக அளவில் பல்வகை நடவடிக்கைகள்  முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சித் துறையோ புதுமையான உத்திகளை மேற்கொண்டது. பயிற்சித் துறைச் செயலாளார் பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். வாய்ப்புள்ள இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தனியாக சந்தித்துப் பேசினார். அவர்களின் சிந்தனையையும் மனோபாவத்தையும் புரிந்துகொள்ள முயன்றார். சீர்திருத்தத்தின்பக்கம் அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட மாநில ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தொடர்பான தம்முடைய அறிக்கையைச் சமர்ப்பித்தார். இனி வருங்காலத்தில் செய்ய வேண்டியவன குறித்து ஆலோசித்தார். இதற்காக வேண்டி நடந்த மாநில ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் அகில இந்தியத் துணைத் தலைவர் அகில இந்தியத் துணைத் தலைவர் மௌலானா முஹம்மத் ஜஃபர் தலைமை வகித்தார்.

முந்தைய மீக்காத்துக்களோடு ஒப்பிடும் போது அவற்றை விட சென்ற மீக்காத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி இருக்கின்றது. ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்ததைப் போன்று ஊழியர்களின் எண்ணிக்கை பெருகவில்லை. ஊழியர்களின் எண்ணிக்கை விகிதம் குறைவாகத்தான் நீடிக்கின்றது. இந்த விஷயத்தில் தீவிரக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இலக்குகளை அடைகின்ற விஷயத்தில் அனைத்து மாநிலங்களின் நிலைமையும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில மாநிலங்களில் அதிக அளவில் வேலை நடந்திருக்கின்றது. சில மாநிலங்களில் குறைந்த அளவே பணி நடந்திருக்கின்றது.

மேன்மேலும் போராடுவதற்கான வாய்ப்பையும் நல்லருளையும் இறைவன் தந்தருள்வானாக!

m அடிப்படையில் நீங்கள் ஒரு எழுத்தாளர். எழுத்தும் நூலாக்கமும்தாம் உங்களுடைய முதன்மைப் பணிகளாய் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பு அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு எழுத்துப் பணி எந்த நிலையில் உள்ளது? தலைவருக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவாறு எழுத்துக்கும் நூலாக்கத்திற்கும் நேரம் கொடுக்க முடிந்ததா? 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி:
கடந்த மீக்காத்தில் இடைவிடாத நிர்வாகப் பணிகள், இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்கு நடுவில் நேரத்தை உறிஞ்சியெடுத்து எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்த முயன்று வந்துள்ளேன்.

இவ்வகையில் கடந்த நான்காண்டுகளில் செய்து முடிக்கப்பட்ட பணிகளின் பட்டியல் பின்வருமாறு:

(1) நான் மீள்பார்வை செய்து கொடுத்த பிறகு என்னுடைய கட்டுரைகளின் தொகுப்புகள் இரண்டு வெளியாயின.  அவற்றில் ஒன்று ‘இஸ்லாமிய ஆய்வுகளில் ஃபிக்ஹு தொடர்பான விவாதங்கள்’ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பில் மிகவும் நுட்பமான, முக்கியமான ஃபிக்ஹு விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, தாருல் ஹரப், தாருஸ்ஸலாம் ஆகியவை தொடர்பான கருத்தோட்டங்கள், இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விவரம், முஸ்லிம் அல்லாதவர்களுடன் திருமணத் தொடர்புகள், ஷரீஅத்தில் இஜ்திஹாத் செய்தல் தொடர்பான நிலை, ஷரீஅத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற சட்ட அந்தஸ்து, கிஸாஸ், லிஆன் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் போன்றவற்றைக் குறித்து இந்தத் தொகுப்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவதாக வெளியான கட்டுரைத் தொகுப்பு ‘தஅவத் ஒ தர்பியத், இஸ்லாம் கா நக்தா ஒ நஜர்’.  அழைப்பியல், பயிற்சி தொடர்பாக நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது.

2) பின்வரும் நூல்கள் மீள்பார்வை செய்யப்பட்டு, புதியதாகத் தொகுத்துத் தரப்பட்டன.
1. அவ்ரத் - இஸ்லாமி முஆஷிரா மே. (பெண் - இஸ்லாமிய சமூகத்தில்.
2. அவ்ரத் அவ்ர் இஸ்லாம் (பெண்களும் இஸ்லாமும்)
3. இஸ்லாம் அவ்ர் முஷ்கிலாத்தே ஹயாத் (வாழ்க்கைப் பிரச்னைகளும் இஸ்லாமும்)
4. இன்ஸான் அவ்ர் உஸ்கே மஸாயில் (மனிதனும் அவனுடைய பிரச்னைகளும்)

இந்த நான்கு ஆண்டுகளிலும் அலிகரிலிருந்து தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற இஸ்லாமிய ஆராய்ச்சிக்கான காலாண்டிதழ் ஓரிதழ் கூட தவறாமல் குறித்த நேரத்தில் வெளியானது. இது ஒரு ஆய்வு இதழ் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனைத்  தொகுப்பதும் நடத்துவதும் மிகவும் சிரமமான, கடின உழைப்பையும் தீவிரக் கவனத்தையும் வேண்டுகின்ற பணி என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. அன்புச் சகோதரர் டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வியின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி தடையின்றி நடந்துவருகின்றது.

இத்துடன் சில சிற்றேடுகளும் இந்த நான்காண்டுகளில் வெளியாயின. தலைவர் பொறுப்பை ஏற்றவுடனே தஅவத் இதழிலும் பிற பத்திரிகைகளிலும் என்னுடைய நேர்காணல்கள் வெளியாயின. அந்த நேர்காணல்களின் தொகுப்பை மீள்பார்வை செய்த பின்பு ‘தற்போதைய நிலைமைகளில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயல்திட்டம்’ என்கிற பெயரில் சிற்றேடு வெளியிடப்பட்டது. இதில் தேசம், சமுதாயம், உலகம், இயக்கம் தொடர்பாகத் தொடுக்கப்பட்டக் கேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த முயலப்பட்டிருந்தது.

என்றாலும் இந்த நான்காண்டுகளில் எழுத்து, நூலாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. எழுத்துப் பணிக்காகத் தேவைப்படுகின்ற மனஓர்மையும் கவனமும் நேரமும் கிடைக்காமல் போயிற்று. என்னுடைய கவனக்குறைவும் ஒழுங்கின்மையும் இதற்குக் காரணமாயின.

இனி வரும் நாட்களில் இந்தப் பலவீனங்களைக் களைவதற்கு முயல்வேன். இன்ஷா அல்லாஹ்

இஸ்லாமிய இயக்கத்திடம் தற்போது இருக்கின்ற இலக்கியம் இன்றைய இந்தியச் சூழலில் போதுமானதல்ல என நினைக்கின்றீர்களா? தற்போ-தைய இந்தியச் சூழலின் தேவைகளை நிறைவேற்று-கின்றவையாக அவை இல்லையெனில் புதியதாக, தற்போதைய காலகட்டத்துக்கேற்ப எழுதப்பட்ட நூல்களை வெளிக் கொணர்கின்ற திட்டம் இருக்கின்-றதா? அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்-கின்றனவா  ?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: என்னைப் பொருத்தவரை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்-டுள்ள நூல்கள் ஆகட்டும், அல்லது வேறு இஸ்லாமிய இயக்கம் வெளியிட்டுள்ள நூல்கள் ஆகட்டும் அவற்றில் மேற்கத்திய சிந்தனைகளை விட இஸ்லாம் தான் சிறப்பானது என்பதை நிறுவி, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான உணர்வைத் தோற்றுவிப்பதற்குத்தான் முயலப்பட்டிருக்கின்றது.

இந்தியப் பின்னணியைக் கருத்தில் கொண்டாலும் சரி, இந்தியாவுக்கு வெளியில் இருக்கின்ற உலகைக் கருத்தில் கொண்டாலும் சரி, இன்றும் சிந்தனைக் களத்தில் மேற்கத்தியர்களே மேலோங்கி நிற்கின்றனர். உண்மையில் நமக்குப் போட்டியாக இருப்பது மேற்கத்திய சிந்தனைகள்தாம்! மேற்கு முன்வைக்கின்ற அரசியல் சிந்தனைகள், அதன் பொருளாதாரம், அதன் ஒழுக்க மதிப்பீடுகள் ஆகியவைதாம் இன்று தீர்மானிக்கின்ற சக்திகளாய் வளர்ந்துள்ளன.

இந்தக் கோணத்தில் இந்த அடிப்படையில் இலக்கியங்களை - நூல்களை, ஆக்கங்களை- வெளியிடுவது அவசியமாகும்.

சிந்தனைக் களத்தில் செய்யப்படுகின்ற பணி இரண்டு வகையானவை. (1) நீடித்த, நிலையான மதிப்பைக் கொண்டவை. இதற்கு எடுத்துக்காட்டாக மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்களால் எழுதப்பட்ட குத்பாப் பேருரைகள், இதுதான் இஸ்லாம், இஸ்லாமியப் பண்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகிய நூல்களைச் சொல்லலாம். (2) குறிப்பிட்ட காலத்தியப் பிரச்னைகளை விவாதிப்பவை. இத்தகைய நூல்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் பற்றியெரிகின்ற பிரச்னைகள் குறித்து பேசுபவை. என்றாலும் இவற்றிலும் நூலாசிரியரின் அடிப்படை சிந்தனைகள் இழையோடிக் கொண்டிருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மஸ்லா ஏ கவ்மியத், மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் போன்ற நூல்களைச் சொல்லலாம்.

இங்கு இன்னொன்றையும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக சிந்தனைக்களத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு பணியும் குறிப்பிட்ட நிலைமைளிலும் சூழல்களிலும் பின்னணியிலும்தான் அரங்கேறுகின்றன. எனவே நூல்களை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட காலத்துச் சூழல்கள், பின்னணி போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் சில சமயம் தேவையற்றக் குழப்பங்களுக்கு ஆளாகக் கூடும்.

புதியதாக நூல்களை வெளியிடுவதைப் பொருத்த வரை இன்று நிலைமைகள் பெரும் அளவுக்கு மாறிவிட்டன. அரசியல் புரட்சிகள், மேற்கத்திய பண்பாட்டுத் தாக்குதல்கள், புதிய பொருளாதார மாற்றங்கள் எல்லாமே புதியதாக நூல்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே பணி நடந்துள்ளது. நேரத்தையும் திறமையையும் ஆற்றலையும் வேண்டுகின்ற பணி இது. ஜமாஅத்துக்கு இவையனைத்தும் கிடைத்திட இறைவனிடம் பிரார்த்தியுங்கள். 

நூலாக்கக் களத்தில் உங்களுடைய பங்களிப்புகள் என்ன? தனிப்பட்ட முறையில் நீங்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்துச் சொல்லுங்களேன். 

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படாத, அதிகமாகச் சீண்டப்படாத விவாதப்பொருள்களை நான் எடுத்துக் கொண்டேன். எடுத்துக்காட்டாக என்னுடைய நூல்களில் ஒன்று ‘கைர் முஸ்லிமோ சே தஅலுக்காத் அவ்ர் உன் கே ஹுகூக்’ - முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ளலும் அவர்களின் உரிமைகளும்’.

இன்றையக் காலத்தில் முஸ்லிம்களில் அதிகமானோர் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் சிறுபான்மை மக்களாய் வாழ்கின்றனர். அத்தகையச் சூழலில் முஸ்லிம் அல்லாத மக்களுடன் எத்தகையத் தொடர்புகளை வைத்துக் கொள்வது என்பது அங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும். இந்தியப் பின்னணியிலோ இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் பன்மடங்கு கூடிவிடுகின்றது.

இந்தக்கேள்வியோடு இணைந்து இருக்கின்ற கேள்வி என்னவெனில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற, முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்டுள்ள நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் என்னென்ன? இதனைக் குறித்தும் நான் மேலே குறிப்பிட்ட நூலில் விவாதித்துள்ளேன்.

இதே போன்று இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்கள் மார்க்கக் கண்ணோட்டத்தில் எத்தகைய உரிமைகளைக் கோருவார்கள்? அவர்கள் அங்கு எத்தகைய பங்காற்றுவார்கள்? இஸ்லாம் அல்லாத அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்ற முஸ்லிம்களின் நடத்தையும் ஒழுக்கமும் எத்தகையதாக இருக்கும்?  போன்றக் கேள்விகளுக்கு விடை காணுகின்ற வகையில் நான் எழுதிய நூல்தான் ‘கைர் இஸ்லாமி ரியாஸத் அவ்ர் முஸல்மான்’ - (இஸ்லாம் அல்லாத அரசாங்கமும் முஸ்லிமும்). முஸ்லிம்கள் மீது பயங்கரவாதம், வன்முறை, தேசத் துரோகம் போன்ற பழிகள் சுமத்தப்பட்டு வந்தச் சூழலில் இந்த நூல் எழுதப்பட்டது.

இந்த உலகில் நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியமாகவும் வாழவே மனிதர்கள் அனைவருமே விரும்புகின்றார்கள். நோயுறும்போது அந்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவதும் அவனுடைய உரிமையாகும். நலமான வாழ்வை உறுதி செய்கின்ற அனைத்தையும் ஏற்பாடு செய்வதும், நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதும், சிகிச்சைக்கான வசதிகள் செய்து தருவதும் அரசாங்கத்தின் கடமைகளாகும்.

இந்த விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய அறவுரைகளின்
இஸ்லாம் இந்தப் பிரச்னையை எப்படி அணுகுகின்றது? எப்படித் தீர்க்கின்றது போன்றக் கேள்விகளுக்கு விடை காண்கின்ற விதத்தில் நான் எழுதிய நூல்தான் ‘ஸிஹத்-ஒ-மர்ஸ் : இஸ்லாமி தஅலிமாத் மே’ - உடல் நலமும் நோயுறுதலும் : இஸ்லாமிய அறவுரைகளின் ஒளியில்’

இதே போன்று மனித உரிமைகளும் மிக அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரச்னைகளே. மனித உரிமைகள் குறித்தும் குறிப்பாக பெண்களின் உரிமைகள் குறித்தும் நிறைய எழுதியிருக்கின்றேன். அவற்றைப் பற்றிய விவரங்களை விவரிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

த மதங்கள் பற்றிய ஆய்வு அவசியம்; குறிப்பாக இந்திய மதங்களை அறிந்துகொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் முயல வேண்டும். மதங்கள் குறித்து நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் கடந்த மீக்காத்தில் கருத்து தெரிவித்திருந்தீர்கள். இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்னென்ன செய்யப்பட்டன?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்று உலகெங்கும் உலகாயதம் மேலோங்கியிருக்கின்றது. இதன் விளைவாகவும் வேறு பல காரணங்களாலும் ஆன்மீகத்தின் பக்கம் மக்கள் பெருமளவில் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்கத்திய நாடுகளிலும் இந்தப் போக்கைப் பார்க்க முடியும்.

கிழக்கத்திய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் இந்த ஆர்வமும் ஆன்மிகத் தேடலும் எடுப்பாகத் தென்படுகின்றன. மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் குறித்தும் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசப்படுகின்றது.

சமூகத்தின் விதியைத் தீர்மானிக்கின்ற அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மதம் இல்லை. என்றாலும் இந்தியா போன்ற நாடுகளில் மதங்கள் மக்களைக் கட்டிப்போட்டிருக்கின்றன. மதங்களின் செல்வாக்கு பெரும் அளவுக்கு ஓங்கியிருக்கின்றது. மக்களை மதங்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே மதங்கள் குறித்து ஆய்வு செய்வதும் வாசிப்பதும் அவசியமாகின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தத் தேவையை உணர்ந்தது. இதனை நிறைவேற்றுவதற்காக ஆக வேண்டியதைச் செய்வதற்கும் முன் வந்தது. என்றாலும் இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை.

இருந்தாலும் இந்தக் களத்தில் சென்ற மீக்காத்திலும் அதற்கு முந்தைய மீக்காத்களிலும் ஒரளவுக்கு பணி நடந்திருக்கின்றது. குறிப்பாக இந்தக் களத்தில் மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் அவர்கள் எழுதியிருக்கின்ற ‘இஸ்லாம் கி அஹம்மியத் இந்து தரம் கி பஸ் மன்ஜர் மே’ - ‘இந்து மதத்தின் பின்னணியில் இஸ்லாத்தின் முக்கியத்துவம்’ என்கிற நூலையும் ‘தஸவ்வுரே ஆகிரத்:இந்துஸ்தானி மத்ஹபி குதுப் கி ரோஷ்ணி மே’ - ‘இந்திய மத நூல்களின் ஒளியில் மறுமை பற்றிய கண்ணோட்டம்’ என்ற நூலையும் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
‘மறுபிறவிக் கோட்பாடு: யதார்த்தமான ஆய்வு’ எனும் தலைப்பில் டாக்டர் முஹம்மத் அஹ்மத் எழுதிய நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும்.
‘இஸ்லாம் ஓர் இறைமார்க்கம்’ என்கிற தலைப்பில் டாக்டர் ராஜிந்தர் நாராயண் லஅல் அவர்களால் எழுதப்பட்டு மதுர் சந்தேஷ் வெளியிடப்பட்டுள்ள நூலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய நூலாகும்.

பல்ரியா கஞ்சு ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த மௌலானா அனீஸ் அஹ்மத் மதனி அவர்கள் ‘மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு’ என்கிற தலைப்பில் 400 பக்கங்களைக் கொண்ட கனமான நூல் ஒன்றை எழுதியிருக்கின்றார். இதனைப் பதிப்பித்து வெளியிடுவதும் இன்ஷா அல்லாஹ் இந்தத் துறையில் பெரிதும் நன்மை அளிக்கும்.

இதாரா தஹ்கீக் தஸ்னீஃப் இஸ்லாமி (இஸ்லாமிய ஆய்வு நிறுவனமும்) இது தொடர்பாக சில குறிப்பிடத்தக்க நூல்களை வெளியிட்டுள்ளது. அன்பியா கிராம் கி தஅவத் (நபிமார்களின் அழைப்பு), தஅலிமாத்தே அன்பியா அவ்ர் குர்ஆன் (நபிமார்களின் போதனைகளும் குர்ஆனும்) ஆகிய இரண்டு நூல்கள் முக்கியமானவை. இவையிரண்டையும் டாக்டர் ரஜியுல் இஸ்லாம் நத்வி எழுதியிருக்கின்றார்.

இந்தத் துறையில் ஜமாஅத் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆற்றல் வாய்ந்த, வல்லமை மிக்க எழுத்தாளர்களை ஜமாஅத் உருவாக்கியிருக்கின்றது. இவர்கள் இந்தியாவில் இருக்கின்ற மதங்களை ஆழ்ந்து படித்திருக்கின்றார்கள். அதன் பிறகு இஸ்லாத்தின் ஒளியில் அவற்றைக் குறித்து கருத்துரைத்திருக்கின்றார்கள். இவர்களைப் போன்ற ஆற்றல் படைத்தவர்கள் இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். மற்ற மதங்களை நல்ல முறையில் ஆய்வு செய்த அனுபவமும் எழுத்தாற்றலும் கொண்ட வல்லுநர்கள் இருக்கலாம். இருந்தாலும் இந்தத் துறையில் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது என்பது உண்மையே.

m தனிப்பட்ட வணக்க வழிபாடுகளோடு இஸ்லாம் நின்றுவிடுவதில்லை. அது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவிய முழுமையான வாழ்க்கைத் திட்டம் என்பது பற்றிய விழிப்பு உணர்வு இந்திய முஸ்லிம்களிடம் மலர்ந்திருக்கின்றதா? இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அத்தகைய விழிப்பு உணர்வு இல்லை; சமூக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டிருப்பதற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கின்றீர்களா?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: இன்றும் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தைத் தனிப்பட்ட விவகாரமாகத்தான் பார்க்கின்றார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. அவர்கள் அதனை தனிப்பட்ட விவகாரமாகவே எடுத்துக்கொள்கின்றார்கள். அதன் அடிப்படையில் ஒருசில மார்க்கக் கடமைகளையும் மேற்கொள்கின்றார்கள். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை ஒரளவுக்கு பேணி நடந்துகொள்கின்றார்கள். இவற்றில் பிழை ஏற்பட்டுவிட்டாலோ, குறை நேர்ந்துவிட்டாலோ அது மார்க்க விவகாரத்தில் ஏற்பட்டுவிட்டதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இதே போன்று குடும்ப விவகாரங்களிலும் இயன்ற வரை இஸ்லாமிய போதனைகளின்படி நடந்துகொள்வதில் தக்கக் கவனம் செலுத்தப்படுகின்றது. நிகாஹ், குளா, தலாக், வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் மார்க்கத்தின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறையையும் கவனத்தையும் பார்க்க முடிகின்றது. குடும்ப வாழ்வு தொடர்பான விவகாரங்களில் மார்க்கப் போதனைகளுக்கு நேர்மாறாக நடப்பது குற்றம் என்கிற தெளிவும் சமுதாய மக்களிடம் நிறைந்துள்ளது.
ஆனால், வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்ட வந்த மார்க்கம்தான் இறைவனின் மார்க்கம்; வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இறைமார்க்கத்தின் வழிகாட்டுதல்களின்படியே நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தெளிவோ, நாம் எல்லோருமே ஒரே சமுதாயத்தவர்கள்தாம்; மார்க்க உறவுதான் நம் எல்லாரையும் பிணைத்திருக்கின்றது; சமுதாயத்தின் மகிழ்ச்சியும் துக்கமும் நம் அனைவருடைய மகிழ்ச்சியும் துக்கமும் ஆகும் என்கிற விழிப்பு உணர்வோ சமுதாய மக்கள் மத்தியில் இல்லை என்பதுதான் உண்மை. இறைவன் இந்தச் சமுதாயத்தை கைரே உம்மத் - சிறந்த சமுதாயமாக ஆக்கியிருக்கின்றான்; இந்தச் சமுதாயத்தைக் கொண்டு உலகைச் சீர்திருத்துகின்ற வேலையைச் செய்ய விரும்புகின்றான்; இறைவனின் மார்க்கம்தான் உலகில் செழிப்பைக் கொண்டு வரும்; மறுமையிலும் நமக்கு வெற்றியைத் தேடித்தர வல்லது அந்த இறைமார்க்கம் ஒன்றே என்கிற பரந்த எண்ணமும் விரிவான பார்வையும் சமுதாய மக்கள் மத்தியில் பசுமையாக நிறைந்திருக்கவில்லை.

இந்தக் களத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

m  சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது. சமுதாய ஒற்றுமை மலர்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து பாடுபட்டும் வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் உங்களுடைய தலைமையில் சமுதாய ஒற்றுமைக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? உங்களுடைய பார்வையில் இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் உள்ளது?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதில் ஜமாஅத்துக்குத் தனி ஆர்வமும் விருப்பமும் இருந்து வந்துள்ளது என்றும் அதற்காக ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டும் வருகின்றது என்றும் மிகச் சரியாகச் சொன்னீர்கள்.  இந்த விஷயத்தில் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஜமாஅத் தொடர்நது முயன்று வந்துள்ளது. சமுதாயத்திலும் இது தொடர்பாகக் கவலையும் அக்கறையும் இருந்து வருகின்றது.

சமுதாய ஒற்றுமை மலர வேண்டுமென்பதற்காக ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், தீனி தஅலிமி கவுன்ஸில் போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஜமாஅத்தும் பங்கேற்றது; இந்த நிறுவனங்கள் திறம்படச் செயலாற்றுவதற்கும் ஜமாஅத் தொடர்ந்து உதவியும் ஒத்துழைப்பும் அளித்து வருகின்றது. இன்றும் இந்த நிறுவனங்களுடன் ஜமாஅத் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது.

கடந்த மீக்காத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முறையான முயற்சிகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான பொறுப்பாளர்களையும் சந்தித்தோம். இந்த முயற்சிகள், சந்திப்புகளின் பலனாக நல்ல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இறைவனுக்கே நன்றிகள் அனைத்தும்!

ஜமாஅத் குறித்து நிலைபெற்றிருந்த தவறான கருத்துகள் பெரும் அளவுக்கு குறைந்துள்ளன. புதிய தொடர்புகளும் உறவுகளும் மலர்ந்துள்ளன. தேவ்பந்த் நிறுவனம் தன்னுடைய சில முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தது. நாங்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். இதே  போன்று அவர்களும் நம்முடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.

ஸஹாரபூர் மஸாஹிருல் உலூம், லக்னௌ நத்வத்துல் உலமா, ஜமிய்யத்துல் அஹ்லே ஹதீஸ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகள் வளர்ந்துள்ளன. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களுடனும் உறவுகள் வலுப்பெற்றுள்ளன. தென் இந்திய மார்க்க நிறுவனங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்குள்ள மார்க்க அறிஞர்களுடனும் தொடர்புகள் அதிகரித்துள்ளன. எங்கிருந்தும் எந்தவொரு வகையிலும் எதிர்ப்பையும் இடைவெளியையும் வெளிப்படுத்துகின்ற யாதொன்றும் வெளிப்படவில்லை. அதற்கு மாறாக சேர்ந்து பணியாற்றுகின்ற விழைவும் ஒத்துழைக்கின்ற உணர்வும்தாம் மேலிட்டு நின்றன.

இன்று சமுதாய ஒற்றுமை எந்த நிலைமையில் இருக்கின்றது எனக் கேட்கின்றீர்கள். இது தொடர்பாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். சமுதாயத்தைப் பாதிக்கின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற உணர்வு சமுதாயத்தில் மிகைத்தோங்கி நிற்கின்றது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்கின்ற விஷயத்தில் ஜமாஅத்தின் ஆற்றலும் செல்வாக்கும் பெரிதும் துணைநிற்கும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்களைப் போல சமுதாயத்தில் ஒற்றுமை நிலவுகின்றது என்று சொல்ல முடியாது. என்றாலும் அந்த நிலையை அடைவதற்கான தொடர்முயற்சிகள் தொடர்கின்றன.

m ஸ்லாத்தை ஓர் மாற்றாக (alternative) அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்றே நீங்கள் உங்களுடைய உரைகளிலும் ஆக்கங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகின்றீர்கள்.  இந்த விஷயத்தில் ஜமாஅத் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது? புதிய மீக்காத்தில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றது?

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்க்கைத் திட்டங்களுக்கு மாற்றாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றே நான் என்னுடைய கட்டுரைகளிலும் கொற்பொழிவுகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளேன். இவ்வாறு நாம் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தாத வரை அழைப்புப் பணி முழுமையடையாது என்பதுதான் என்னுடைய வாதம் ஆகும்.

போதாக்குறைக்கு இன்று நாட்டிலும் உலகிலும் நிலவுகின்ற சூழல்களும் இதன் தேவையைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன. கடந்த மீக்காத்தில் வகுக்கப்பட்ட கொள்கை மற்றும் செயல்திட்டத்திலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நம்முடைய பணிகளின் திசை வரையறுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு வகையான சித்தாந்த வெற்றிடம் காணப்படுகின்றது. இன்று எவருக்குமே வாழ்க்கை திட்டம் பற்றிய விவாதத்தில் போவதற்கே விருப்பமில்லையோ எனத் தோன்றுகின்றது. எவருக்குமே சித்தாந்தம், வாழ்க்கைத்திட்டம் பற்றிய கவலை இல்லை. பொருளாதார வளர்ச்சி, செழிப்பான வாழ்க்கைதான் இவர்களுக்கு எல்லாமே. என்ன விலை கொடுத்தாவது அதனை அடைய இவர்கள் தயார்.

இந்த நிலையில் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத்திட்டம் தேவை என்பதை உணர வைப்பது நம்முடைய வேலை ஆகும். வாழ்க்கைத்திட்டம் தீர்மானிக்கப்படும்போதுதான் வாழ்வின் திசை நிர்ணயமாகும்.

இஸ்லாம் ஒரு வாழ்க்கைத்திட்டத்தை வழங்குகின்றது. மனிதனின் பொருளாதார, உலகாயதத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வழிகளையும் அவனுடைய மனம் நிம்மதி பெறுவதற்கான வழிமுறைகளையும் சொல்கின்ற வார்க்கைத் திட்டம் அது!

வணக்க வழிபாடுகளுக்காக அது வழங்கியுள்ள கட்டமைப்பு அதன் வாழ்க்கைத்திட்டத்துக்கு வலிமை சேர்க்கின்ற திறன் படைத்தது.

இவ்வாறாக வாழ்வின் ஒவ்வொரு துறைக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை விரிவாக விவரிக்க வேண்டிய தேவை உள்ளது. இன்று குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகின்றது. சமூகத்தின் அடித்தளம் குடும்ப அமைப்புதான். இன்று அதன் கட்டமைப்பு வேகமாக ஆட்டம்காணத் தொடங்கியுள்ளது. ஆனால் இஸ்லாம் அதனைக் கட்டமைப்பதற்கு வலுவான, தீர்க்கமான அடிப்படைகளை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஒழுக்கம், நடத்தை தொடர்பாக இஸ்லாம் வழங்குகின்ற அறவுரைகளும் நெறிமுறைகளும் தூய்மையான ஆளுமைகளைச் செதுக்கி வார்த்தெடுப்பதில் பெரும் பங்காகற்றுகின்றன. இந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளால் மனித உறவுகளும் துலங்குகின்றன.

இஸ்லாம் வழங்குகின்ற பொருளாதார அமைப்பு நீதமும் நியாயமும் செறிந்ததும் சமநிலை தவறாததும் ஆகும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையிலான மோதலிலிருந்து சமூகத்திற்கு விடுதலை அளிப்பது இஸ்லாம் கட்டமைக்கின்ற பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமே. இஸ்லாம் கட்டமைக்கின்ற சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான உறுதியை அளிப்பது இஸ்லாமிய பொருளாதார அமைப்பு மட்டுமே. ஆகுமான வழிகளில் பொருளைப் பெருக்கிக் கொள்வதற்கும் இஸ்லாமிய பொருளாதாரக் கட்டமைப்பு அனுமதிக்கின்றது.

இஸ்லாம் வழங்குகின்ற அரசியல் கட்டமைப்பிலோ மனிதன் மீது மனிதன் ஆட்சி செலுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. மனிதனை மனிதனின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து மனிதர்கள் அனைவரையும் ஏக இறைவனின் அடிமைகளாக, ஏக இறைவனின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்குவது இஸ்லாம் தான்.

இஸ்லாத்தை மாற்றாக அறிமுகப்படுத்துகின்ற போக்கு இன்று ஜமாஅத் தோழர்களில் பரவியிருக்கின்றது. நமது பேச்சாளர்களும் சொற்பொழிவாளர்களும் இஸ்லாத்தை ஓர் மாற்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது.
Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...